Sunday, September 7, 2008

இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம்:சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி

இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம்:சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி
தொண்டு நிறுவனம் அதிர்ச்சி தகவல்


சென்னை, செப்.7-

சுவீஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி (1456 பில்லியன் அமெரிக்க டாலர்) என்ற அதிர்ச்சி தகவலை தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த தொகை இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழலுக்கு எதிரான அமைப்பு

சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கு எதிராக போராடவும் `பவுண்டேஷன் பார் ரெஸ்டோரேஷன் ஆப் நேஷனல் வேல்ïஸ்' (எப்.ஆர்.என்.வி.) என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

சுவாமி பூமானந்தாவை தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு உள்ள இந்த அமைப்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாச்சலய்யா, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் இ.ஸ்ரீதரன், மத்திய விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் என்.விட்டல், கல்வி ஆலோசகர் விபா பார்த்தசாரதி ஆகியோர் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

சென்னை கிளை தொடக்கம்

மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த அமைப்பின் கிளை அலுவலகங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தமிழக கிளை நேற்று தொடங்கப்பட்டது, தொடக்கவிழா மற்றும் ஆலோசனை கூட்டம் சென்னை ஆர்.ஏ.புரம் இமேஜ் கலையரங்கில் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு அமைப்பின் தலைவர் சுவாமி பூமானந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக நாடுகள் பயப்படும் அளவுக்கு இந்திய நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒழுக்கநெறிமுறைகள், அறநெறிகள், மதிப்பீடுகள் இல்லாத வளர்ச்சி என்றாவது ஒருநாள் நிலைகுலைந்து போகும். நாட்டின் ஒழுக்கநெறிமுறைகளை மீட்டெடுக்கும் வகையில் ஊழலை ஒழிப்பதற்காக புதிய அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.

டெல்லியில் மாநாடு

இதன்மூலம், ஊழலை அடிப்படையில் இருந்து ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கண்காணிப்பு குழுக்களை அமைக்கவும், ஒழுக்கநெறிமுறைகள் தொடர்பான பாடங்களை ஆரம்பக் கல்வியில் சேர்க்கவும் முயற்சி எடுக்கப்படும். இந்த அமைப்பின் தேசிய அளவிலான மாநாடு டெல்லியில் நவம்பர் மாதம் 18, 19-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார். இதில் எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள் உள்பட பலர் மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.

ரூ.64 லட்சம் கோடி

சுவீஸ் வங்கியில் போடப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி. இந்த தொகை இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம் ஆகும். அந்த பணத்தில் வெளிநாட்டு கடனை அடைத்துவிட்டு எஞ்சிய தொகையை வங்கியில் போட்டாலே வட்டியே பல கோடி வரும். மக்கள் மீது எந்த வரிச்சுமையும் செலுத்த தேவையில்லை. சுவீஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கியிடம் கேட்டுப்பெற்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு நினைத்தால் இதைச் செய்ய முடியும்.

இவ்வாறு சுவாமி பூமானந்தா கூறினார்.

ஊழலை ஒழிக்க முடியும்

மத்திய விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் என்.விட்டல் கூறியதாவது:-

ஊழலை ஒழிக்க முடியுமா என்று கேட்கிறார்கள். முடியும் என்றால் முடியும். முடியாது என்று நினைத்தால் முடியாது. ஊழலை ஒழிப்பதற்கு முதலில் நமது தேர்தல் நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். ஏனென்றால் முதல் ஊழல் அரசியல் ஊழல்தான்.

தேர்தல் நடைமுறையை திருத்தி அமைக்காவிட்டால் ஊழலை ஒழிக்கவே முடியாது. இந்தியாவில் 900-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. வருமான வரிவிலக்கு பெறுவதற்காக லெட்டர்பேட் கட்சிகளை ஆரம்பிக்கிறார்கள்.

இந்தியர்கள் பட்டியல்

சுவீஸ் வங்கியில் பணம் போட்டிருக்கும் இந்தியர் பட்டியலை மத்திய அரசு நினைத்தால் கேட்டுப்பெற முடியும். ஆனால் இதை எல்லாம் செய்வார்களா? என்பது சந்தேகம்தான்.

இவ்வாறு விட்டல் கூறினார்.

டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரன் கூறும்போது, "டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவையை தினசரி சுமார் 81/2 லட்சம் பயணிகள் பயன்படுத்துகிறார்கள். ரெயில் நிலையங்களையும், ரெயில் வளாகத்தையும் தூய்மையாக வைத்திருப்பது பற்றி இந்த அமைப்பு மூலம் பயிற்சி அளிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.