Thursday, July 30, 2009

அரிய கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க காசி - ராமேசுவரம் ரயிலுக்கு மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயரிட வேண்டும்

அரிய கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க காசி - ராமேசுவரம் ரயிலுக்கு மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயரிட வேண்டும்

www.mudukulathur.com


ராமநாதபுரம், ஜூலை 29: உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் சுமார் 3600-க்கும் மேற்பட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள், 117 வகையான உயிருள்ள அற்புத பவளப் பாறைகள் உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதி குறித்து தேசிய அளவில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த காசி-ராமேசுவரம் புதிய ரயிலுக்கு மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயரிடுவது பொருத்தமாக இருக்கும்.

தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதியே மன்னார் வளைகுடா எனப்படுகிறது. இப் பகுதி ராமேசுவரத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரையுள்ள இந்திய எல்லைக்கு உள்பட்ட கடல்பரப்பை உள்ளடக்கியதாகும்.

மன்னார் வளைகுடா கடல் பகுதி என்பது இலங்கைத் தீவில் தலைமன்னாருக்கும் தெற்கு தமிழக கடலோரத்தில் வளைகுடா பரப்புக்கும் இடைப்பட்ட பரப்பாகும்.

குடா என்றால் ஆழம் குறைந்த கடல் பகுதி எனப்படுகிறது. இலங்கையில் தலைமன்னார் எனப்படும் மன்னாரை ஒட்டியுள்ள பகுதியாகவும் இருப்பதால், மன்னார் வளைகுடா எனவும் அழைக்கப்படுகிறது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியை மத்திய அரசு கடந்த 1986-ம் ஆண்டு கடல்சார் தேசியப் பூங்காவாக அறிவித்தது. இக் கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளும் அதனைச் சுற்றியுள்ள பவளப் பாறைகளையும் உள்ளடக்கிய 560 சதுர கி.மீ பரப்பளவே தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

1989-ல் யுனெஸ்கோ நிறுவனம் பரிந்துரையின்படி, இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் வளமான பகுதியாக இருப்பதால், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட முதல் கடல்சார் தேசியப் பூங்காவாகும்.

எனவேதான், இதனைப் பாதுகாக்கவும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு ராமநாதபுரத்தில் மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளை என்ற ஓர் அமைப்பை நிறுவியது.

இந்த அமைப்பு பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து கூட்டு ரோந்துப் பணி மேற்கொண்டு அரிய வகை கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்து வருகிறது.

மன்னார் வளைகுடா கடல் வளம் நமது பகுதியில் உள்ள ஓர் அரிய பொக்கிஷம். முதுகெலும்பில்லாத உயிருள்ள பிராணிகளின் எளிய தொகுப்பாகவும் பவள உயிரிகளால் ஆனவைதான் பவளப்பாறைகள் என்று இன்றும் பலரும் அறியாமல் உள்ளனர்.

கடலுக்கு அடியில் உள்ள பலவகையான பவளப் பாறைகளைப் பார்த்து மகிழ மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளை சுற்றுலாப் பயணிகளுக்காக "கண்ணாடி இழைப்படகு' சவாரிக்கும் ஏற்பாடு செய்துள்ளது.

அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் குறித்து அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் அலுவலர் வீ. நாகநாதன் கூறியதாவது:

சர்வதேச திமிங்கில ஆய்வு அமைப்பு முக்கியமான கடல் பாலூட்டிகள் உலக அளவில் அதிகமாக இருக்கும் இடம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில்தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இதுதவிர, உலகிலேயே வேறு எங்குமே இல்லாத அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான 100 வகை முள்தோலிகள், 260 வகை சங்கு சிப்பிகள், 450 வகை மீன்கள், 70 வகை கணுக்காலிகள், 6 வகை திமிங்கிலங்கள், கண்களைக் கவரும் விதத்தில் 150 வகையான வண்ண மீன்கள், பாலூட்டி வகையில் 12 வகையான ஆவுலியாக்கள் எனப்படும் கடல் பசுக்கள், 34 வகை கடல் அட்டைகள், 12 வகையான கடல் பாம்புகள், தலை குதிரையைப் போலவும் வால் குரங்கைப் போலவும் நின்று கொண்டே குதித்துக் குதித்து ஓடும் அற்புதக் கடல் குதிரைகள், கடல் பன்றிகள், கடல் ஆமைகள் இப்படியாக 3600 வகைகள் உள்ளன.

மேஜை வடிவம், தட்டு வடிவம், மனித மூளை வடிவம் மற்றும் மான்கொம்பு வடிவம் உள்ளிட்ட பவளப் பாறைகளின் வகைகள் 117-ம் வளர்ந்து கொண்டே இருக்கும் உயிரினங்களும்தான் இக் கடல் பகுதியில் இருக்கின்றன என நாகநாதன் தெரிவிக்கிறார்.

இந்தியக் கடல் பகுதியில் காணக் கிடைக்காத கடல் வளங்கள் அடர்ந்து, படர்ந்து, வியாபித்து இருக்கும் அற்புத சூழல் தற்போது கொஞ்சம், கொஞ்சமாக அழிந்துகொண்டே வருவதுதான் வேதனைக்குரியது.

வெடிவைத்து மீன் பிடித்தல், கடல் வளத்தையே அழிக்கும் வகையில் பல்வேறு மீன்பிடி முறைகள், கடல் மாசுபடுதல் போன்ற காரணங்களால் மக்களிடையே இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை.

இதனால் இந்த அற்புத கடல்வளம் என்னும் இயற்கை சிதைந்து குன்றி வருகிறது.

எனவே, இத் தேசியப் பூங்கா குறித்து தேசிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இவற்றை அழிவிலிருந்து பாதுகாக்க காசி முதல் ராமேசுவரம் வரை விடப்படவுள்ள புதிய விரைவு ரயிலுக்கு (கடந்த ரயில்வே பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்பட்டது) மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயரிடுவது சிறப்பாக அமையும்.

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயர் வைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

Wednesday, July 29, 2009

ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் !

ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் !

( ஆக்கம் ; மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி
துபாய் –Cell : 050 795 99 60 )


http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=164

நான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவன் என்ற போதிலும் பெற்றோர், மனைவி, உறவினர் என்ற உள் வட்டத்திற்குள் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன். ஒரு கடையில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்த போதிலும் மனதில் ஒரு நிறைவு இருந்தது. குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் தவறாமல் கலந்து கொள்ளும் பாக்கியமும் கிடைத்தது.

இதே சூழ்நிலையில் ஓடிக்கொண்டிருந்த என் வாழ்க்கைச் சக்கரம் துபாய் மோகம் என்ற பேராசையில் சிக்கி தடம் புரண்டு விட்டது. ஆம் இந்த மோகம் எனக்குள் வந்ததல்ல, எனது தாய் வீட்டாரிடமிருந்து நற்போதனை என்ற மயக்க ஊசி மூலம் எனக்குள் ஏற்றப் பட்டது. ஊரிலிருந்து எவ்வளவு தான் உழைத்தாலும் எவ்வித முன்னேற்றமும் காணமுடியாது ! ஒரு இரண்டு வருடம் துபாய்க்கு போய் வந்தாலே போதும் வீடு, வாசல், நகை, பணம் என ஓரளவுக்கு சொத்து சேர்த்து விடலாம். பிறகு வேண்டுமானால் ஊரிலேயே ஏதாவதொரு கடைவைத்து பிழைத்துக் கொள்ளலாம். என்ற வசீகர திட்டத்தை கூறிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனது குடும்பத்தார் கூறிய திட்டமெல்லாம் உண்மையிலேயே நடந்து விட்டதை போன்ற உணர்வே எனக்குள் ஏற்பட்டது.
அப்போதே துபாய் மோகம் என்னும் நெருப்பு எனக்குள் கொழுந்து விட்டு எரிந்தது. திருமணம் முடிந்து இரண்டு மாதம் தானே ஆகிறது புது மனைவியை விட்டு பிரிவது நியாயமா? என்ற கேள்விக்கெல்லாம் கூட விடை கொடுக்க என் மனம் இசையவில்லை. காலம் தாமதிக்காது எனது ஊரின் முக்கியஸ்தர் ஒருவரை பார்த்து என்னை எப்படி யாவது துபாய்க்கு அனுப்பிவிடுங்கள். என்ன வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று கெஞ்சிக் கூத்தாடினேன். நான் ஒன்றும் படித்த பட்டதாரியல்லவே, படிப்புக்கேற்ற வேலை தேட! அதனால் தான் என்ன வேலையாக இருந்தாலும் என சொல்லி இருந்தேன்.
எனது ஆர்வத்தைப் பார்த்து அந்த நல்ல மனிதர் சம்பளம் குறைவாக கிடைக்கும் விசா,டிக்கெட்க்கு 50 ஆயிரம் செலவாகும் பரவாயில்லையா எனக் கேட்டது தான் தாமதம் துபாய்க்கே போனது போல் ஒரு நம்பிக்கை எனக்குள் பிறந்தது. எவ்வளவு சம்பளமானாலும் பரவாயில்லை என்னை எப்படியும் துபாய்க்கு அனுப்பி விடுங்கள் என்ற கோரிக்கை வைப்பதில் மட்டும் கொஞ்சமும் சுரத்துக் குறையாமல் பார்த்துக் கொண்டேன். சரி பார்க்கலாம் என்ற அந்த பெரிய மனிதர் ஒரு வழியா என்னை துபாய்க்கு அனுப்பி விட்டார். நானும் பல கனவுகளுடன் துபாய் வந்து 15 ஆண்டுகள் ஓடி விட்டன.


என்னுடன் துபாய் வந்த எனது நண்பன் சுஹைல் மட்டும் சொல்லி வைத்தாற் போல இரண்டு வருடம் முடிந்ததுமே விசாவை கேன்சல் செய்து விட்டு தாயகம் போய் விட்டான். ஊரில் ஏதோ ஒரு பெட்டிக்கடை வைத்து கஷ்டப்படுவதாக பிற நண்பர்களின் மூலம் கேள்விப்பட்ட ஞாபகமுண்டு. நான் துபாய் வந்து இரண்டு வருடம் முடியும் தருவாயில் விடு முறையில் ஊருக்கு போகலாம் என நினைத்து என் வீட்டாரிடம் அதாவது சகோதர, சகோதரிகளிடம் நான் ஊருக்கு வரப்போகிறேன் உங்களுக்கெல்லாம் என்ன வேண்டுமென கேட்டது தான் தாமதம் மிகப்பெரிய பட்டியலே வந்து சேர்ந்து விட்டது கடிதத்தின் வாயிலாக, அந்தப் பட்டியலுடன் ஒரு வேண்டுகோளும் இருந்தது தான் கொஞ்சம் நெருடலாக இருந்தது.
அதாவது உடனே வர வேண்டாம் துபாய் போய் இரண்டு வருஷம் தானே ஆகுது இன்னும் இரண்டு வருஷம் இருந்து உழைத்துவிட்டு கை நிறைய பணத்துடன் வந்தால் நல்லாயிருக்கும் என்ற வேண்டுகோள் தான் அது ! அந்தக் கடிதம் பார்த்ததுமே ஊருக்குப் போகும் எனது ஆசை யெல்லாம் கானல் நீராய் மாறிவிட்டது. எனது தாய், உடன் பிறந்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்த நான் என் மனைவியின் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்காத குற்றவாளி யாகி விட்டேன்.

பிறகு ஒரு வழியா 4 வருஷம் முடிந்து ஊருக்கு பயணம் மேற்கொண்டேன் விடுமுறையில் தான் ! அதற்கு முன்பே கடைசி இரண்டு வாரங்களும் யார் யாருக்கு என்னென்ன வாங்க வேண்டுமோ? அதையெல்லாம் கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி ஆசை ஆசையாய் வாங்கினேன். தாய், சகோதரிகள், மனைவிக்கு சேலைகள் எடுத்துக் கொண்டேன், மற்றபடி வாசனை திரவியங்கள், தைலங்கள், சோப்புகள் என வகை வகையாக வாங்கிக் கொண்டேன். நான் எடுத்த சேலைகளில் என் மனைவிக்கு கத்திரிப் பூ கலரில் ஒரு சேலையும் என் சகோதரிக்கு ஆரஞ்சுக் கலரில் ஒரு சேலையும் ரொம்ப ஆசைப்பட்டு எடுத்தேன்.

இந்த இரண்டு சேலை மட்டும் எடுப்பதற்காகவே சோனாப்பூரிலிருந்து ( Labour Camp Area ) டேரா பஜாருக்கு வெயில் நேரத்தில் போய் சேலையை எடுத்துக் கொண்டு என் அறைக்கு வருவதற்குள் வியர்த்த வியர்வையை டவலால் துடைத்து அதை இரு முறை பிழிந்தும் விட்டேன். ஆனாலும் டவல் ஈரமாகவே இருந்தது.

ஒரு வழியா வாங்கிய பொருட்களையெல்லாம் லக்கேஜாக கட்டி விட்டு நான்கு வருடம் கழித்து பெற்றோரை, உடன்பிறப்புகளை, மனைவியை காணப் போகிறோம் என்ற வெறித்தனமான ஆசையில் நான் அணிந்த ஃபேண்டில் பெல்ட் போட மறந்து விட்டேன். ஏர் போர்ட்டில் வந்து பார்த்த பிறகு தான் அதை உணர்ந்தேன். அதுவும் பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்கும் இடத்தில் சக ஆண் பயணிகள் பெல்ட்டை கழற்றி பிளாஸ்டிக் தட்டில் வைத்த போது தான் எனது இடுப்புக்கும் கை வைத்து பெல்ட் போடாத உண்மையை கண்டு பிடித்தேன். அந்தளவுக்கு என் நினைவெல்லாம் என் குடும்பத்தைப் பற்றியே இருந்தது. பெல்ட் போடாததால் அடிக்கடி இடுப்பிலிருந்து கீழிறங்கிய எனது ஃபேண்ட்டை அவ்வப்போது மேல் தூக்கி விடும் போது சுகமான சுமை யாகவே இருந்தது ! விமானத்தில் அமர்ந்து விட்டேன் குறிப்பிட்ட நேரம் வந்ததும் விமானம் புறப்படப் போகும் தகவலை விமானப் பணிப்பெண் உணர்த்தினார் ஆம் இடையில் விமானம் பறக்கும் போது ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் எப்படி உயிருடன் தப்பிப்பது? என்ற செய்முறை பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார்.

விபத்திற்குள்ளான விமானங்களிலிருந்து பாராசூட் மூலம் உயிர் தப்பிய பயணிகளின் எண்ணிக்கையை மட்டும் கேட்டு விடாதீர் அதை கடைசி வரைக்கும் யாராலும் கண்டு பிடிக்க முடியாது! பிறகு ஏன் இந்த சடங்கு சம்பிராதயம்? எனக் கேட்கிறீர்களா? எல்லாம் பயணிகளின் நம்பிக்கையை அதிகரிக்கத்தான் !விமானம் மேலெழும்பியதும் சக பயணிகள் பாதுகாப்பான பயணத்திற்காக அவரவர் கடவுளை வேண்டினர்.
ஆனால் என் மனம் மட்டும் பறக்கும் விமான வேகத்தை விட தாயகத்தைப் பற்றிய பல சுகமான நினைவு களாய் சீறிப் பாய்ந்தன. ஊர் போனதும் மறக்காமல் நமக்கு கற்றுத் தந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் முத்துவேலை நேரில் பார்த்து சுகம் விசாரித்து விட வேண்டும். நம் வளர்ச்சியைப் பார்த்து (அதாவது என் தொப்பை வயிற்றை சொல்கிறேன்) ஆச்சர்யப்படுவார்.

காமெடி நடிகர் வடிவேலு பாஷையில் சொல்வதானால் ஆசிரியர் என்னைப் பார்த்ததும் அவனா …….. நீ? என்று கூட கேட்கலாம். பிறகு அவரது வகுப்பு மாணவர்களிடம் இவன் என் பழைய மாணவன் என நம்மை அறிமுகப்படுத்தும் போது நமக்குள் எவ்வளவு உற்சாகம் ஏற்படும் ! இன்னும் இது போன்ற பல எதிர்பார்ப்பு நினைவுகள் அசை போட ஆரம்பிக்கும் போதே விமானம் சென்னையில் தரையிறங்கி விட்டது. நான்கு மணிநேரம் போனதே தெரியவில்லை. சென்னை விமான நிலையமே பரபரப்பாக காணப்பட்டது. முறையான பரிசோதனைகள் முடிந்து எனது லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன்.
என் கண்களின் தேடலை புரிந்து கொண்ட இளைய தம்பி அண்ணே…. எனக் குரல் கொடுத்தான் அவனைப் பார்த்ததும் தான் ஓரளவுக்கு பதற்றம் குறைந்தது. பிறகு என் தாய் மற்ற சகோதரர்கள், சகோதரிகள் என எல்லோரும் என் தலையை அன்பாக தடவிக் கொண்டே சுகம் விசாரித்தனர். இவைகளினூடே எனது இதயத்துடிப்பு மட்டும் அதிகரித்துக் கொண்டே போனது. எல்லாம் என் ஆசை நாயகியை காண வேண்டும் என்ற பரபரப்புத்தான்! என் அண்ணிக்குப் பின்னால் வெட்கத்துடன் மறைந்து கொண்டு நின்றிருந்தாள் என் அன்பு மனைவி ! அவளை அருகில் போய் பார்த்த போது அப்பப்பா …… அந்த இனிமையை வர்ணிக்க வார்த்தையில்லை என்னைப் பார்த்த அவள் சிறிய சினுங்கலுடன் சொகமா இருக்கீங்களா? எனக் கேட்ட போது எனக்குள் நான் பாட ஆரம்பித்து விட்டேன். ஒரு வார்த்தை பேச காத்திருந்தேன் நான்கு வருஷம் …. இந்தப் பாட்டை என் மனசுக்குள்ளேயே பாடிக் கொண்டேன். பிறகு நலம் விசாரிப்புகள் முடிந்ததும் என் குடும்பத்தார் வந்த காரில் ஏறிக் கொண்டேன். கார் ஒரே சீரான வேகத்திலேயே எனது ஊரை நோக்கி போய்க் கொண்டிருந்தது.

ஆனால் என் மனம் மட்டும் ஒரே சீராக இருக்கவில்லை ! நான் சொன்ன மாடலில் வளையல் எடுத்தாயா? இது என் தங்கையின் கேள்வி? எனக்கு என்ன வாங்கினாய்? என்ற என் அக்காவின் கேள்விக்கு பதில் சொல்ல முயன்ற போதே என் தாயார் குறுக்கிட்டு எம் மவன் பயணம் செய்து களைப்பா இருக்கான் அவனை தொந்தரவு செய்யாமல் ஓய்வெடுக்க விடுங்கள் என அரட்டியதும் தான் எனது லக்கேஜின் விசாரிப்புகள் நின்றன. டெக்னாலஜியின் உதவியுடன் உலகமே முன்னேறிக் கொண்டிருந்தாலும் சென்னையிலிருந்து எனது ஊருக்கு 12 மணி நேரம் பயணம் செய்வதென்ற தரித்திரம் மட்டும் மாறவே இல்லை. அதிகாலை புறப்பட்ட எனது பயணம் மாலையில் தான் முடிந்தது. ஆம் எனது ஊருக்குள் வந்து விட்டேன் குறுக்கும் நெடுக்குமாக இருந்த தெருவுக்குள் வளைந்து வளைந்து கார் போனது. அந்தத் தெருவின் கடைசி வீடு என்னுடைய ஓட்டு வீடு தான். ஒரு வழியா காருக்குள் ளிருந்து வெளியில் வந்த நான் எனது வீட்டின் வாசலில் கையில் ஆரத்தி தட்டுடன் நின்ற என் மனைவியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அப்படியானால் நாம் சென்னை ஏர் போர்ட்டில் பார்த்தது? பாட்டுப் பாடியது? எல்லாமே என் மனப்பிரம்மை தான் என்பதை சில விநாடி களிலேயே உணர்ந்து கொண்டேன்.

உண்மையாகவே என் மனைவி சென்னைக்கு வரவில்லை. காரணம் நான் ஊர் வரும் போது ஆரத்தி எடுக்க ஆள் வேண்டுமாம், அதனால் தான் என் மனைவியை மட்டும் அழைத்து வரவில்லை என என் வீட்டார் சொன்னார்கள். இந்த ஆரத்தி முறையை கண்டு பிடித்தவன் மட்டும் அன்று எதிரில் கிடைத்திருந்தால் அவனை உண்டு இல்லை என ஆக்கியிருப்பேன். அவ்வளவு கோபம். என் மனைவியின் ஆரத்திக்குப் பிறகு வீட்டுக்குள் போய் குளித்து விட்டு புதிய ஆடையணிந்து ஹாலில் வந்து அமர்ந்தேன். என்னை நலம் விசாரிப்பதற்காக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களெல்லாம் வந்து போயினர். இரவு ஒன்பது மணியாகி விட்டது.
இனியும் குடும்பத்தாரின் பார்சல் பிரிப்பு ஆர்வத்திற்கு தடை போட விரும்பாமல் பார்சலை பிரித்து அவரவருக்குரியதை பங்கு வைத்து கொடுத்தேன். ஒரு வழியா பாகப்பிரிவினையெல்லாம் முடிந்து இரவு உணவருந்தி விட்டு பயணக்களைப்பால் சோர்ந்து போயிருந்த என் கண்களுக்கு ஓய்வு கொடுத்தேன். நான்கு வருடம் கழித்து குடும்பத்தை பார்த்த பரவசத்தில் கண்கள் நன்றாய் உறங்கி விட்டன. காலையில் எழுந்து குளித்து முடித்து காலை உணவை முடித்ததும் மனைவியை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு போனேன். அங்கே ராஜ மரியாதை கிடைத்தது. வாய்க்கு ருசியான மட்டன் பாங்கா, நெய் சோறு சாப்பாட்டை முடித்ததும் நானும் என் மனைவியும் தனியறைக்குள் போய் வாயில் வெற்றிலை மென்று கொண்டே நான்கு வருட பிரிவின் சோகத்தை வார்த்தைகளால் பரிமாறிக் கொண்டிருந்தோம்.

திடீரென ஒரு கூச்சல் சப்தம் வந்ததும் பதறியடித்து அறையை விட்டு வெளியே வந்தேன் சிறிதும் தாமதமின்றி என் கால் அருகில் வந்து விழுந்தன ஆரஞ்சுக் கலர் சேலை ஆமாம், நான் வெயிலில் அலைந்து என் சகோதரிக்காக ஆவலுடன் எடுத்த அதே ஆரஞ்சுக்கலர் சேலை தான் ! சேலை வந்த திசையை நோக்கினேன் வாசலில் என் சகோதரி கண்களில் கோபம் கொப்பளிக்க நின்று கொண்டு இதையும் உன் பொண்டாட்டிக்கே கொடுத்து விடு ! இந்த நாத்தம் பிடித்த சேலை எனக்கு வேண்டாம். அவள் உன்னை வசியம் பண்ணி மயக்கி விட்டாள். அதனால் தான் அவளுக்கு விலை உயர்ந்த சேலையும் எனக்கு விலை குறைந்த சேலையுமாய் எடுத்திருக்கிறாய்.

சமீப காலமாக உனது நடவடிக்கையில் பெரிய மாற்றம் தெரிகிறது போன மாசம் ஊர் வந்த நடுத்தெரு ஹாஜா கனி மகன் ராவுத்தரிடம் உம் பொண்டாட்டிக்கு கேமரா வைத்த மொபைல் போன் வாங்கி கொடுத்து விட்டியாமே, எல்லாம் எங்களுக்கு தெரியா தென்றா நினைத்து விட்டாய்? திடீரென பொண்டாட்டி மோகம் வந்து விட்டதோ? இதெல்லாம் நீயாக செய்ய வில்லை எல்லாம் அவள் செய்துள்ள மருந்து மாயம் தான். எத்தினி நாளைக்கு இந்த மோகம்? நானும் பார்த்திர்ரேன் என மூச்சு விடாமல் பத்ரகாளி ஆட்டம் ஆடி விட்டு வெடுக்கென போகிறாள். அவள் போன திசையை பார்த்தேன் நல்லவேளை தெரு வெறிச்சோடி கிடந்தது. தெருவில் என் சகோதரி மட்டுமா போகிறாள் கூடவே எனது சந்தோஷத்தை யுமல்லவா பிடுங்கிப் போகிறாள். அவள் தூக்கியெறிந்தது சேலையை மட்டுமல்ல, அதில் இருந்த எனது உழைப்பின் வியர்வையையும் தான் !

பாவம் என் மனைவிக்கு எடுத்த சேலையின் விலை சகோதரிக்கு எடுத்த சேலையை விட 10 திர்ஹம் விலை குறைவென்பது எனக்கும் அந்த ஆண்டவ னுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். பிறகு ஏன் இந்த கலவரம்? விலை குறைவான எனது மனைவியின் சேலை கலரும், டிசைனும் ஏதோ விலையுயர்ந்த ரகம் போல் காட்டி விட்டது ! அதனால் வந்த வினை தானோ? இது. எந்தவொரு விஷயத்தையும் வெளித்தோற்றத்தை மட்டுமே வைத்து எடை போடும் நாசகார சிந்தனை இன்னுமா மனிதர்களுக்குள் இருக்கிறது? நல்லதுக்கே காலமே கிடையாது என்பதை சாதாரண இந்த சேலை விவகாரத்திலேயே புரிஞ்சிகிட்டேன்.
சரி ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம், என் மனைவிக்கு எடுத்த சேலையின் விலை மற்றவர்களுக்கு எடுத்ததை விட அதிகமாகவே இருக்கட்டுமே, இதில் என்ன குற்றம் உள்ளது? என்னை நம்பி வந்த அவளுக்கு நானே உரிமையாகிவிட்ட பிறகு எனது பணமும், பொருளும் உரிமையாகதா? அவள் என்ன விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமையா? இன்னும் சொல்லப்போனால் என் மனைவிக்கு நான் தானே அடிமை ! அவள் என்னைத்தானே விலை கொடுத்து வாங்கி இருக்கிறாள். ஆம் வரதட்சிணை எனும் லட்சங்களையும், மோட்டார் பைக், தங்கச் செயின் உள்ளிட்ட சீர் பொருட் களையும் விலையாக கொடுத்து தானே என்னை மாப்பிள்ள யாக ஏற்றுக் கொண்டாள்.

லட்சங்களை வாரி கொடுத்தபோது என் வீட்டாரால் மதிக்கப்பட்ட என் மனைவி இப்போது தீண்டத்தகாதவளா? ஏன் இந்த முரண்பாடு? சகோதரிகளாய் இருப்போரே கொஞ்சம் மனச்சாட்சியுடன் நடக்க கூடாதா? என சத்தம் போட்டு தெருவில் கத்த வேண்டும் போல் இருந்தது. காரணம் நான் துபாய்க்கு வந்ததே என் மனைவி யின் நகைகளை விற்றுத்தான் ! இவ்வளவு தியாகத்தையும் செய்துள்ள என் மனைவிக்கென்று இந்த நான்கு வருடத்தில் பெரிதாக எதுவுமே செய்திடவில்லை எனக்குத் தெரிந்த வரைக்கும் என் சகோதரி சொன்னது போல் நடுத்தெரு ஹாஜா கனி மகன் ராவுத்தரிடம் கொடுத்து விட்டது மற்றபடி எதுவுமே கொடுத்துவிடவில்லை. ஏன் எனக்கு எதுவும் தரவில்லை என்றோ, எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என என்றைக்குமே என்னிடம் வாக்குவாதம் செய்யாத என் மனைவியை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்ததை தான் என்னால் ஜீரணிக்கவே முடியல.
நான்கு வருடங்கள் கொதிக்கும் பாலைவன மணலில் கல்லையும், மண்ணையும் சுமந்து காய்த்துப் போன கைகளுடன் திட்டு திட்டான பித்த வெடிப்பு கால்களுடன் ஒரு இரண்டு மாதம் ஊருக்குப் போய் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என வந்துள்ள எனக்கு சந்தோஷத்தை தராவிட்டாலும் பரவாயில்லை இருக்கும் நிம்மதியையாவது பிடுங்காமல் இருந்திருக்கலாமே? என நினைத்து அழுதே விட்டேன் பாலைவன நெருப்புக் காற்றில் கஷ்டப்பட்ட போது கூட நான் அழுததில்லை !

ஆனால் இப்போ அழுகிறேன். எந்த குடும்பத்தின் சந்தோஷத்திற் காகவும், வசதிக்காகவும் என் உணர்ச்சிகளை சாகடித்து விட்டு இளம் மனைவியை தனிமையில் தவிக்க விட்டுட்டு துபாய் வந்து உழைத்து ஓடாய் தேய்ந்து ஒரு வேளை உணவு மறுவேளை உண்ணா நோன்பென்று செலவை சிக்கனப்படுத்தி பணம் சேர்த்து கொடுத்தேனோ? இப்போ அதே குடும்பம் தான் எனக்கெதிராக உள்ளது ! உணர்ச்சி வயப்பட்ட நிலையில் வேதனையுடன் நின்றிருந்த எனது தோளில் ஆறுதலாக கை வைத்து அமரவைத்தாள் என் மனைவி. தேவையில்லாமல் என்னால் உங்கள் குடும்பத் திற்குள் சண்டை வேணாங்க,

எனக்கு தந்த கத்திரிப்பூ கலர் சேலையையும் உங்கள் சகோதரிக்கே கொடுத்திடுங்க உங்கள் உண்மையான அன்பு மட்டுமே போதும்ங்க என்ற எனது மனைவியின் முகத்தை பார்த்தேன் அதில் என் மீதான கரிசனம் மட்டுமே தெரிந்தது. ஒரு சேலை கலவரத்தால் அன்றைய சுகமான பகல் உறக்கத்தை தொலைத்து விட்டேன். மாலையில் முகம் அலம்பி மனைவி கையால் தேநீர் அருந்தி விட்டு மீண்டும் என் வீட்டிற்கு போனேன். வாசலில் அமர்ந்து பக்கத்து வீட்டு பாட்டிம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த எனது தாயார் என்னைக் கண்டதும் சந்தோஷ மாக வா தம்பீ சாப்பிட்டியா? முகமெல்லாம் வாட்டமா யிருக்கு ஏன் பகலில் தூங்கலியா? என அதிக அக்கறையுடன் கேட்டதை வைத்தே பகலில் சகோதரி வந்து ஆடிய ஆட்டம் நம் தாய்க்கு தெரிந்திருக்கவில்லை என்று யூகித்துக் கொண்டேன்.

பிறகு வீட்டிற்குள் போன என்னை அம்மாவைத் தவிர யாருமே கண்டு கொள்ளவில்லை. இப்படியே இரண்டு மாதங்களும் உருண்டோடி விட்டன. மீண்டும் எனது துபாய் பயணத்திற்கான நாளும் வந்து விட்டது. பயணம் புறப்படுவதற்கு முதல் நாள் இரவில் கனத்த இதயத்துடன் தேம்பி, தேம்பி அழுத என் மனைவியின் அழுகையை என்னால் நிறுத்த முடியலை. நீங்கள் ஏன் துபாய் போகிறீர்கள்? பேசாமல் இங்கேயே ஏதாவது வியாபாரமோ, அல்லது கடையிலோ வேலை பாருங்கள். குறைந்த வருமானமாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் துபாயி லிருந்து தரும் மாசக் காசு 1500 ரூபாயை இங்கிருந்து தர முடியாதா? உங்கள் கை, கால்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அழுகையாக வருதுங்க இனிமேலும் பாலை வனத்தில் கஷ்டப்படாதீங்கமா ப்ளீஸ் ! என்று எனது கைகளை பிடித்து கெஞ்சிய போது ஏறத்தாழ ஒரு குழந்தையை போலவே மாறியிருந்தாள் எனது மனைவி. கவலைப்படாதே, இன்னும் இரண்டே வருஷம் தான் ! ஓரளவுக்கு சம்பாதித்து விட்டு கேன்சலில் ஊர் வந்து விடுகிறேன். பிறகு நாம் நினைத்தது போல் இங்கேயே ஏதாவதொரு வியாபாரம் செய்து கொண்டு காலத்தை ஓட்டிடலாம் என நான் கொஞ்சம் நம்பிக்கையுடன் கூறிய பிறகு தான் என் மனைவி சமாதானமடைந்தாள்.

பின்னர் பொழுது விடிந்து பயணத்திற்கான ஆயத்தங்கள் வெகு ஜோராக நடந்தன. குடும்பத்தார் அனைவரின் வீட்டிற்கும் நேரில் போய் பயணம் சொன்னேன் ஒவ்வொரு வீட்டிலும் அவரவர் சக்திகேற்ப 51, 101 என வெற்றிலையும் பணமும் தந்தனர். தொலை தூர பயணம் செல்லும் போது வெற்றிலை பணம் கொடுக்கும் கலாச்சாரத்தைக் கண்டு பிடித்தவர் 501, 1001 என நிர்ணயம் செய்திருக்க கூடாதா? என்று என் உள் மனம் கேட்டுக் கொண்டது ! ஒரு வழியா குடும்பத்தார் எல்லோரிடமும் பயணம் சொல்லிவிட்டு நண்பகல் ஒரு மணிக்கு வீடு வந்தேன். மனைவி பகல் உணவை எடுத்து வைத்து பரிமாறினாள் எனக்கோ வயிற்றுப்பசி அறவே இல்லாததால் சாப்பாட்டின் மீது ஆர்வமின்றி இருந்தேன். அப்போது எனக்கிருந்ததெல்லாம் நம் மனைவியை விட்டு இன்னும் இரண்டு வருஷம் பிரியப் போகிறோமே என்ற கவலை தான் என்னை அணுஅணுவாய் சாகடித்தது. என் நிலையை புரிந்து கொண்ட மனைவி சட்டென சாப்பாட்டை யெல்லாம் ஒடுக்கி வைத்து விட்டு எனது மடியில் விழுந்து அழத்தொடங்கினாள்.

பயணம் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரமே இருக்கிறது என்பதை நினைத்து ஒவ்வொரு நொடியின் மீதும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அழுதழுது வீங்கியிருந்த என் மனைவியின் நெற்றியில் உச்சி முகர்ந்து விட்டு அழுது வடிந்த எனது முகத்தையும் சோப்பு போட்டு கழுவி பின்னர் ஃபேண்ட், சர்ட் அணிந்தவனாய் சுண்ட வைத்து காய்ச்சித் தந்த பசும்பாலை மட்டும் சம்பிரதாயத் திற்காக குடித்தேன். வாசலில் ஆட்டோக்காரன் மெட்ராஸ் பஸ் கிளம்ப இன்னும் ½ மணி நேரமே உள்ளது சீக்கிரம் கிளம்புங்க என்று குரல் கொடுத்தான். எனது லக்கேஜ்கள் ஆட்டோவில் ஏற்றப்பட்டு நானும் எனது மனைவியும் ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டோம். எனது தாய் சகோதரிகள் மற்றொரு ஆட்டோவில் பின்னால் வந்து கொண்டிருந்தனர். சென்னைக்கு செல்லும் சொகுசு பஸ் நிறுத்தம் வந்ததும் முன்னதாக எல்லோரிடத்திலும் கை குலுக்கி விட்டு விடை பெற்றுக் கொண்டு பஸ்ஸில் ஏறி அமரவும் பஸ் கிளம்பவும் சரியாக இருந்தது. எனது பூத உடலைத்தான் பஸ் சுமந்ததே தவிர உயிரை அல்ல ! காரணம் உயிர் என் மனைவியின் நினைவோடு கலந்து விட்டது. செய்யாத கொலைக்கு ஆயுள் தண்டனை பெற்ற சிறைக் கைதியின் மனநிலை எப்படியோ? அப்படித்தான் சென்னை புறப்பட்ட அன்று எனக்கும் இருந்தது. குடும்பத்தார் களெல்லாம் சிரிக்க நான் மட்டும் அழவேண்டுமா? என்ன நியாயம் இது?

பஸ் பயணம் முடிந்து சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தேன். விமான நிலைய பரிசோதனைகள் முடிந்த பின் தொலைபேசி மூலம் ஊரில் உள்ளவர்களிடம் பயணம் சொல்லி விட்டு துபாய் வந்து சேர்ந்து விட்டேன். சென்னையிலிருந்து துபாய்க்கு பறந்து கொண்டிருந்த நான்கு மணி நேரத்தில் எத்தனை எத்தனை கேள்விகளால் என்னையே நான் கேட்டுக் கொண்டேன். நான்கு வருடம் கழித்து தேவைக்கு மேல் சாமான்களும் வாங்கி கொண்டு ஊர் போய் கிடைத்த இரண்டு மாத விடுமுறையை ஜாலி பண்ணிவரலாம் என்று நினைத்து போன எனக்கு எவ்வளவு மன உளைச்சல்களை குடும்பத்தினர் தந்து விட்டனர்.

சேலை நல்லா இல்லை என்பது ஒரு பிரச்சினை, கேட்ட ஸ்பிரே வாங்கி வரலை என இன்னொரு பிரச்சினை, வளையல் டிசைன் சரியில்லை என்ற மற்றொரு குறை, தன் கணவனுக்கு கேமரா மொபைல் போன் வாங்கித் தரலையென்று அக்காவின் கோபம் என ஒவ்வொரு கோணத்திலும் நான் சந்தித்த பிரச்சினை யெல்லாம் எனக்குத் தேவையா? நான் மட்டும் உள்ளூர் உழைப்பாளியாக இருந்தாதிருந்தால் இந்த ஈனத்தனமான சண்டைகள் வந்திருக்குமா? நான் சுமந்து போன பார்சலின் மீதான பாசத்தை கூட என் மீது வைக்காத குடும்பத்தினரின் செயலை என்னவென்று சொல்வது? நான் யாருக்காக துபாய் வந்தேன்? உங்களுக்காகத்தானே, மாதம் தவறாமல் தேதி வைத்து அனுப்பிய பணமெல்லாம் உங்களின் தேவைகளுக் காகத்தானே, அனுப்பினேன்.

வாங்கிய சம்பளம் பற்றாக்குறை என தெரிந்ததும் பண்டிகைக்கு புதுத்துணியெல்லாம் நீங்கள் எடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அந்த வருடத்தின் பண்டிகைக்கு நான் மட்டும் பழைய துணியையே உடுத்தி கொண்டு கையிலிருந்த பணத்தை யெல்லாம் உங்களின் சந்தோஷத்திற்காக அனுப்பி வைத்தேனே ! இந்த தியாகத்திற்கெல்லாம் மரியாதை இல்லாமல் ஆக்கி விட்டீர்களே ! எனது குடும்பமே உங்களிடம் தான் கேட்கிறேன் ! இது போன்ற பல கேள்வி களை எனக்குள் கேட்டுக் கொண்டே வந்ததில் விமானம் துபை ஏர்போர்ட்டில் தரை இறங்கப் போவதை கூட உணர முடியாமல் போய் விட்டது. விமானப் பணிப்பெண் பெல்ட் போட சொன்ன போது தான் ஊர் சிந்தனையை உடைத்து விட்டு துபாய் வாழ்க்கைக்கு திரும்பினேன்.

பிறகு மீண்டும் ஊர் சென்றேன் இப்படியே 15 வருஷ என் துபாய் வாழ்க்கை யில் மொத்தமே ஐந்து முறை தான் ஊர் சென்றுள்ளேன். ஊரில் எனது மனைவியுடன் நான் வாழ்ந்த காலம் வெறுமனே 11 மாதம் 16 நாட்களாகும்.

15 வருஷத்தில் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே எனது மனைவியுடன் வாழ்ந்த தால் என்னவோ? இது வரைக்கும் எனக்கு குழந்தை பாக்கியமும் இல்லை. ஒரு முறை ஊர் சென்றிருந்த போது மருத்துவரிடம் போய் உரிய சிகிச்சை எடுத்து கொண்டோம். நானும் எனது மனைவியும் ! அப்போது மருத்துவர் கூட எதற்கும் நீங்கள் விசாவை கேன்சல் செய்து விட்டு ஒரு வருஷமாவது ஊரில் இருந்து பாருங்கள். ஒரு வேளை குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கலாம். என சொல்லிய விஷயத்தை எனது வீட்டாரிடம் கூறினேன். சரி பரவாயில்லை டாக்டர் சொன்ன மாதிரி துபாயை முடித்து விட்டு ஒரு வருஷம் ஊரில் தான் இருந்து பாரேன். அப்படி யாவது குழந்தை பிறக்கட்டுமே என சொல்லி இருப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள்.

டாக்டரென்றால் எதையாவது சொல்லத்தான் செய்வார் அப்பத்தான் அவருக்கும் பிழைப்பு ஓடும். நம் குடும்பத்தில் யாருக்கு பிள்ளை இல்லை? உனக்கு மட்டும் இல்லாமல் போவதற்கு ஆண்டவன் நாடும்போது எல்லாம் தானாக நடக்கும். தேவை இல்லாமல் மனசை போட்டு குழப்பிக் கொள்ளாமல் துபாய் கிளம்புற வழியைப்பாரு என என் வீட்டார் சொன்ன போது என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? நான் என்ன சிறிய வயதுக்காரனா? எப்போ வேண்டுமானாலும் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பதற்கு எனக்கும் வயது 41 ஆகி விட்டது. எனது மனைவிக்கும் வயது 38 ஆகிவிட்டது. இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக் கைதி போல் மறுப்பேதும் கூறாமல் உடனே துபாய் கிளம்பிவிட்டேன்.

இப்போது எனது துபாய் வாழ்க்கைக்கு வயது 15 நான் முதன் முதலில் துபாய் வரும் போது என் வீடு எப்படி இருந்ததோ? அப்படியே தான் இப்போதும் அதே பழைய வீடாகவே இருக்கிறது. அப்படி யானால் எனது 15 வருஷ உழைப்பு என்னாச்சு?

கடைசியாக நான் ஊர் போயிருந்தபோது என் மனைவி வீட்டிற்கான மளிகை சாமான்கள் வாங்குவதற்கு எனது ஊரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நகரத்தில் இருக்கும் பிரபலமான J.J. சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிருந்தோம் நானும் என் மனைவியும், ஷாப்பிங் முடித்து விட்டு பணம் செலுத்தும் இடத்திற்கு வந்து பொருட்களுக்கெல்லாம் பில் போடப்பட்டபோது வேறு யாரோ எடுத்து வைத்த இரண்டு பிளாஸ்டிக் குடமும் என் பில்லோடு சேர்க்கப்பட்டதை அறிந்து குடத்தை ரிட்டர்ன் செய்து விடுமாறு காசாளரிடம் வலியுறுத்தினேன்.

ஆனால் அவர் ரிட்டர்ன் செய்ய முடியாது பில் போட்டது போட்டது தான் என வாக்குவாதம் செய்ய ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நான் உன் முதலாளியை காட்டு நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன் என சொன்னதும் மிகவும் நக்கலாக மாடியில் இருக்கிறார் போய் பார்த்து விட்டு வா என காசாளர் ஓர்மையில் பேசிவிட்டான்.

இந்த மன உளைச்சலுடன் பக்க வாட்டிலிருந்த மாடிப்படியேறி முதலாளியைப் பார்க்க வந்த விஷயத்தை அவரது அறைக்கு வெளியிலிருந்த இளம் பெண்ணிடம் கூறினேன். சில நிமிட காத்திருப்புக்குப் பின் முதலாளி அறைக்குள் செல்லுமாறு அப்பெண் கூறியதும் நான் உள்ளே நுழைந்து மரியாதை நிமித்தமாக கை குலுக்க அருகில் சென்ற போது அதிர்ச்சி அடைந்து விட்டேன். அவர் வேறு யாருமில்லை.

15 ஆண்டுகளுக்கு முன் என்னுடன் துபாய் வந்து இரண்டே வருஷத்தில் கேன்சலில் ஊர் வந்து பெட்டிக்கடை வைத்து கஷ்டப்படுவதாக கேள்விப்பட்ட அதே சுஹைல் தான் ! என்னப்பா சுஹைல் எப்படி இருக்கிறாய்? என கேட்ட என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை போலும் நீங்கள் யார்? என திருப்பி கேட்டு விட்டார்.

ஏனென்றால் 15 வருடத்திற்கு முன்பு பார்த்த என்னை இப்போது முழு வழுக்கைத்தலையுடனும், நரைத்த தாடியுடனும், பெருத்த தொப்பையுடனும் பார்த்ததால் அடையாளம் தெரியாமல் போய்விட்டது. ஆமாம் வலுக்கைத் தலை, நரைத்தாடி, தொப்பை இவைகளெல்லாம் நீண்ட காலம் துபாயில் இருப்பவர்களுக்கு ஏற்படும் மறைக்க முடியாத அடையாளங் களாகும்.

பிறகு என்னை கடை முதலாளி சுஹைலுக்கு நினைவு படுத்திய போதுதான் ஓரளவுக்கு புரிந்து கொண்டவரைப் போல மெலிதாக சிரித்து விட்டு எனது புகாரை ஏற்றுக்கொண்டு காசாளரை என் முன்னாலேயே கண்டித்துவிட்டு இரண்டு பிளாஸ்டிக் குடத்தையும் ரிட்டர்ன் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினார். ஒரு வழியா மற்றவை களுக்கு பணம் கொடுத்து விட்டு வெளியில் வந்த நானும் என் மனைவியும் காரில் ஏறி ஊர் திரும்பினோம்.
மிதமான வேகத்தில் ஆற்றை ஒட்டிய ஒற்றையடி சாலையில் கார் சீராய்ப் போய்க் கொண்டிருந்த போது என் நினைவெல்லாம் J.J. சூப்பர் மார்க்கெட் சுஹைலைப் பற்றியேத்தான் இருந்தது. பெட்டிக்கடை வைத்தவனா இன்று இவ்வளவு பெரிய சூப்பர் மார்க்கெட் ஓனர்? அதிலும் 40 பேருக்கு மேல் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கானே, சுஹைல் எங்கே? நான் எங்கே? என சிந்தித்தவனாகவே என் வீடு வந்து சேர்ந்தேன். இதுபோன்ற பழைய நினைவுகளும் எனது குடும்பத்தாரின் போக்குகளும் துபாயில் உள்ள என்னை தடுமாற செய்கிறது.

துபாய் போனால் குறுகிய காலத்தி லேயே பணக்காரனாகி விடலாம் என கனவு காண்போரே, இதேக் கனவுடன் துபாய் வந்து என்னைப் போல கஷ்டப்படும் சக உழைப்பாளிகளே, 15 ஆண்டுகளாய் பாலைவனத்தில் உழைத்த நான் இப்போதும் கையில் எவ்வித சேமிப்புமில்லாமல் முதன் முதலில் துபாய் வரும் போது எப்படி இருந்தேனோ அப்படியேத்தான் கஷ்டப்பட்ட நிலையில் இருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும் போதும் நான் வாங்கி செல்லும் சாமான்களால் எனது குடும்பத்திற்குள் ஏற்படும் தேவையற்ற சண்டை சச்சரவுகள் மட்டும் தான் எவ்வித குறைவுமின்றி முன்னேற்றம் கண்டு வருகிறது !

குழந்தையில்லாமல் இருக்கும் எனக்கு மீண்டும் விடுமுறை காலம் நெருங்குகிறது. இப்போது சொல்லுங்கள் நான் மறுபடியும் விடுமுறை யிலேயே ஊர் செல்லவா? அல்லது கேன்சலில் ஊர் செல்லவா?

எதுவானாலும் நீங்கள் கூறப்போகும் பதிலைப் பொறுத்து தான் எனது முடிவு இருக்கும் !

உங்களின் மேலான நல்ல பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனக் குமுறலுடன் ஓர்
உழைப்பாளி !!

குறிப்பு ;

வாசகர்களே, உங்களின் மேலான கருத்துக்களை sjaroosi@yahoo.com என்ற இ.மெயில் முகவரிக்கோ அல்லது 050 – 7959960 என்ற கைபேசி அழைப்பிற்கோ தெரியப்படுத்தலாம்.

Monday, July 27, 2009

உர்தூ மொழியின் பிறப்பும் – சிறப்பும்

உர்தூ மொழியின் பிறப்பும் – சிறப்பும்

http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=163

இந்திய மொழிகளில் முக்கியமானவை 22. அவற்றில் இரண்டு செம்மொழிகள். ஒன்று வடமொழியான சமஸ்கிருதம் இன்னொன்று தென் மொழியான தமிழ். அப்பர் பெருமான் அவருடைய தேவாரத்தில் தமிழை தென்மொழி என்றே குறிப்பிடுகிறார்.

ஆனால் அதே சமயத்தில் வடபுலத்தில் மக்களிடையே நல்ல செல்வாக்கைப் பெற்றுள்ள உர்தூ மொழி அலாதியானது. பாரசீகம் – அரபு – வடமொழி – இந்துஸ்தானி ஆகிய நான்கு மொழிகளின் சேர்க்கையிலிருந்து பிறந்த மொழி உர்தூ. இம்மொழியிலுள்ள மெய்ஞ்ஞானக் கவிதைகள் இனிமையானவை மட்டுமல்ல. ஆன்மீக ஆர்வலர்களின் இதயங்களைக் கவரக் கூடியவை. அதிலும் இஸ்லாமிய அந்தரங்க அனுபூதிச் செம்மல்களாகிய மெய்ஞ்ஞானிகள் அருளிய பாடல்கள் தனிச்சுவை மிக்கவை. அவற்றைத் தமிழகத்துச் சித்தர் பாடல்களுடன் ஒப்பிடலாம். எளிய சொற்களில் அருமையான நுட்பங்கள் நிறைந்த சிலேடை களும் – உவமைகளும் கொழிக்கும் பாடல்கள் அவை. வட புலத்தில் வடமொழி இலக்கியங்களில் நல்ல தேர்ச்சியுடைய பெரும் புலவர்களும் அறிஞர்களும் உர்தூ மொழியிலும் அசாத்திய புலமை மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள்.

இதற்குக் காரணம் உர்தூ மொழியில் நிறைந்துள்ள சமய பேதங்களைக் கடந்த ஆன்மீக உணர்வு ததும்பும் பாடல்களே ஆகும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வடமொழியிலும் இந்தியிலும் ஆழ்ந்த புலமை உடையவர் மட்டுமல்ல. உர்தூ கவிதைகளில் பயில்பவரும் கூட. தமிழகத்து மேடைகளில் அண்ணா கோலோச்சி வந்ததைப் போல, இந்தி மேடைகளில் அற்புதமான நாவலராக விளங்கி வருபவர் வாஜ்பாயி. அவருடைய சொற்பொழிவில் ஆங்காங்கு உர்தூக் கவிதை வரிகள் மசாலா போல் மணம் வீசுவது வழக்கம். உர்தூ மொழி -இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பாடல்களால் ஜீவகளை யோடு பொலிந்து நின்ற போதிலும் இந்து சமய அறிஞர் களின் இதயங்களிலும் குடி கொண்டிருப்பதாகும்.

அதோடு மதபேதம் கடந்த மனிதநேயத்தை வளர்க்கும் அபூர்வ இலக்கியங்கள் உர்தூ மொழியில் நிறைந்துள்ளன. கவிஞர் இக்பாலின் பாடல்கள் உர்தூ மொழிக்கு தனி முக விலாசத்தையே தந்தவை.

பாரதத்தின் விடுதலைப் போராட்டத்தில் முன்ணனித் தலைவர்களில் ஒருவராக பண்டித நேரு வல்லபாய்படேல் போன்றோருக்கு இணையாக விளங்கியவர் – மெளலானா அபுல் கலாம் ஆஸாத். அவர் சுதந்திர இந்தியாவின் கல்வி அமைச்சராகப் பொலிந்து நின்றவர். இஸ்லாமிய சமய ஆன்மீக இலக்கியங்களில் மட்டுமின்றி உர்தூ மொழியில் மிகப் பெரும் புலவராக விளங்கியவர். அவருடைய பெயரில் சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரபு – பாரசீகம் – உர்தூ மொழி துறையின் சார்பில் நிறுவப்பட்டுள்ள மெளலானா அபுல் கலாம் ஆசாத் விருதுகள் ஐந்து பெரு மக்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதுகளை வழங்கிய ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா உர்தூ மொழிகளைப் பற்றி அற்புதமான கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார். உர்தூ மொழியை இஸ்லாமியர்களின் மொழி என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள் அது சரியல்ல. இந்துக்கள் முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பையும் ஆன்மீக உணர்வால் பிணைக்கக் கூடிய இனிய மொழி உர்தூ. இன்னும் கூறுவதென்றால் பஞ்சாபி மொழிக்கு உர்தூ சகோதரி போன்றது என்று பஞ்சாபியைத் தாய்மொழியாகக் கொண்ட பர்னாலா நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.

ஆனால் அதே சமயத்தில் சூஃபி ஞானப் பாடல்களுக்கு எல்லா அம்சங்களிலும் இணையான சித்தர் பாடல்களைக் கொண்டுள்ள இனிய மொழி – தமிழ். அதோடு பண்ணிசையில் மலர்ந்த தேவார – திருவாசகமும் திவ்யப் பிரபந்தப்பாசுரங்களும் உலக இலக்கியங்கள் எதிலும் காண முடியாத பண்பாட்டு அதிசயங்களாகும். அதோடு தமிழ் சாத்திர மொழியாக திருமந்திரத்தில் ஒளி வீசுகிறது.

மேலும் தமிழிலுள்ள நாட்டுப்புறப் பாடல்கள் அலாதியான இயற்கை மணம் கமழ்பவை. இவ்வளவும் இருந்த போதிலும் வடபுலத்தவர் உர்தூவைக் கொஞ்சுவதைப் போல தென்னாட்டவர் தமிழை ஆசையோடு கொஞ்சுவதில்லை. பஞ்சாபைச் சேர்ந்த பர்னாலா உர்தூ பஞ்சாபி மொழிக்கு சகோதரி போல என்று வாய்விட்டுக் கூறி மகிழ்கிறார். ஆயினும் தமிழிலிருந்து பிறந்த தெலுங்கையோ அல்லது கன்னடத்தையோ சேர்ந்த அறிஞர்கள் தமிழைத் தங்களுடைய தமக்கை மொழியாகக் கூறி மகிழ்வதில்லை என்பது வருந்தத் தக்கது.

நன்றி – தமிழ் ஓசை

Sunday, July 26, 2009

மதுரை கோ.புதூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் 29 _ம் தேதி ஸ்பாட் அட்மிஷன்

மதுரை கோ.புதூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் 29 _ம் தேதி ஸ்பாட் அட்மிஷன்

மதுரை,ஜூலை.26

மதுரை கோ.புதூரில், அமைந்துள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) தற்போது அட்மிஷன் நடைபெற்று வருகிறது. வரும் 29 ம் தேதி அன்று நேரிடிசேர்க்கை நடைபெற உள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களும், இந்த நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். மதுரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கீழ்க்கண்ட தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 29 ம் தேதி அன்று காலை 9 மணி அளவில் இந்நிலையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்களுடன் (மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ்) மற்றும் கட்டணம் விலை185, 195, 205 உடன் நேரில் வந்து முதல்வரை சந்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவரை விண்ணப்பிக் காதவர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவம் பெற்றுக் கொள்ள வேண்டும்.


10 ம் வகுப்பு தேர்ச்சிக்கு ; தானியங்கி ஊர்தி, கம்மியர் இயந்திர பராமரிப்பு, தகவல் தொழல்நுட்பம், கம்மியர் (கருவிகள்) , கம்மியர் ஆட்டோ எலக்ட்ரிக்கல் ,எலக்ட்ரானிக்ஸ். 8_ம் வகுப்பு தேர்ச்சி; உலோகத்தகடு வேலையாள், தச்சர், அச்சவார்ப்பவர், 12 _ம் வகுப்பு தேர்ச்சி; சுருக்கெழுத்து (ஆங்கிலம் டி.டி.பி.ஓ. மாணவர்களின் கல்வித் தகுதி, இன சுழற்சி மற்றும் அரசின் சேர்க்கை விதிகளுக்கு உட்பட்டு மாணவர்கள் உடனுக்குடன் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கைக்கு உடனடியாக அனுமதிக்கப்படுவார்கள். பொது மக்கள் மற்றும் மாணவர்கள் இப்பொன்னான வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். அணுர வேண்டிய முகவரி,




துணை இயக்குநர்/ முதல்வர்,
அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்,
கோ.புதூர் மதுரை 625007.

தொலைபேசி எண் 0452 _2566183 என்ற எண்ணுடனும் தொடர் கொள்ளாலம் என முதல்வர் அறிவித்து உள்ளார்.

Saturday, July 25, 2009

ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்

ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்

நெஞ்சே நெனவிருக்கர்
நினைவே நெஞ்சிலிருக்கா?

அரைக்கால் சட்டை
அடியெல்லாம் ஓட்டை

சிறுபிள்ளை பிராயமதில்
செருப்பில்லா நடைபயணம்

பால்வடியும் பருவமதில்
பால்வாடி பயிலகம்

வரிசையா ஒக்காந்து
வாய்பாடு படிச்சமே

பள்ளிக்கொடம் போவாம
அடம் புடிக்கையிலே

குஉடையிலே தூக்கி சுமந்த
கிளவி முகம் நெனவிருக்கா?

நெல்லிக்காயோட மிளகாப் பொடி
களாக்காயோட உப்புத் தூள்

அரை நெல்லிக்கா(ய்)
ஊற வெச்ச நெல்லிக்கா(ய்)

இலந்தப் பழ ஸ{சு
மைமுனம்மா க(i)ட நினைவிருக்கா
மன்சுர் மிட்டாய் க(i)ட நெனவிருக்கா


பாலுவாடி முடிஞ்சி பள்ளிவாசல் பள்ளியில
பாதத்தை பதிச்ச நாள் நெனவிருக்கா

‘அ’ னா சொல்லிக் குடுத்த
அவரஞ்சி டீச்சர் மறந்திடுமா?

சிலேட்டு குச்சி சாக்பீஸ் தின்ற
சுவை இன்னும் நாவிலிருக்கா?

அத பார்த்து விட்டும் அடிக்காத
அந்த அவரஞ்சி அம்மா நினைவிருக்கா

தும்பை நிற வெள்ளை உடையில்
தினம் கல்வி கற்பித்த அந்த

அதிகாலை வெண்ணிலா முகம்
அதை நான் மறப்பேனா?

எதையும் மறக்க வில்லை
இனி மறப்பதற்கும் இல்லை

ஏறத்தாழ இருபதாண்டு கால ஞாபகம்
அலைபேசியின் பொத்தானை அழுத்தி

அம்மா நான் தான் உங்கள் மாணவன்
ஒன்னாம் வகுப்பு உங்களிடம் பயின்றவன்

நானென்ன உங்களின் ஒற்றை பிள்ளையா
ஞாயிறு ஒளி தருவது உலகிற்கே யல்லவா

அந்த பகலவனால் ஒளியேற்கை பெற்ற
ஓர் தாவரம் ஓர் மலர்


அறியக் குஉடும் அந்தச் சூரியனை
ஆதவன் எங்ஙனம் அறிவான்

வானத்தின் நிலவு உலகிற்கே தெரியும்
வையத்தார் யாவரும் நிலவிற்கு ஒன்றுதான்

முதுவை ஹிதாயத்தின் தயவில் தங்கள்
முகம் தன்னை கண்டுகொண்டேன்

இனிய குரலையும் கேட்டுக் கொண்டேன்
இருபதாண்டு கால ஆவலுக்கு ஓர் வடிகால்

கண்களால் காண்பதற்கு விழைகிறேன்
கவிதை சிறகினை விரித்துவிட்டேன்

இருபதாண்டுகளை என் இறகானது
இரு நொடிகளிலேயே கடந்து விட்டது

இதோ உங்கள் பார்வையின் முன்னால்
என் வழிப்பயணம் தொடர்கிறது.

முதுவை சல்மான்
ரியாத் - சவுதி அரேபியா
00966-509342070


From: Muduvai Salman

Thursday, July 23, 2009

ஓரின‌ச்சேர்க்கை இய‌ற்கை நிய‌திக்கு விரோத‌மான‌து

ஓரின‌ச்சேர்க்கை இய‌ற்கை நிய‌திக்கு விரோத‌மான‌து

மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி

www.mudukulathur.com

http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=15187〈=ta&Itemid=90


மேலைநாடுகளின் கலாச்சார சீர்கேட்டின் அடையாளமாகத் திகழும் ஓரினச் சேர்க்கையின் நாசகார விபரீதத்தை உணர்ந்து தான் நாடு சுதந்திரம் பெற்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றத்திற்குரியதென்றும் நமது நாட்டின் ஒழுக்கப் பாரம்பரியத்திற்கு எதிரானதென்றும் அறிவிக்கப் பட்டது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் நபருக்கு இந்திய தண்டனை சட்டத்தின் 377 பிரிவின்படி 10 ஆண்டுகளிலிருந்து ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான தண்டனை வழங்கும் இந்திய தண்டனை சட்டவிதியை நீக்கு வதற்கு அதாவது ஓரினச் சேர்க்கைக்கு எதிரான தடையை நீக்குவதற்கு தற்போதைய மத்திய காங்கிரஸ் அரசு முயற்சித்து வருவது இந்திய கலாச்சாரத்திற்கு விடப் பட்டுள்ள மிகப்பெரும் சவாலாகும்.

மத்திய அரசின் இந்த குறுமதி விபரீத முயற்சி ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கும் மிகப்பெரிய சீரழிவை உருவாக்கி விடும். இறைவன் அமைத்து கொடுத்தை இயற்கையான ஒழுக்கமுள்ள குண நலன்களை மறந்து தன்னிச்சையாக காட்டுமிராண்டித் தனமாக வாழ முயற்சிக்கும் ஒரு சில கலாச்சார சீர் கேட்டாளர்களின் நாசகார வாழ்க்கை சூழலுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்ட ஓரினச் சேர்க்கைக்கு எதிரான இந்திய தண்டனை சட்டத்தை மறு சீராய்வின் பெயரால் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு கொடுக்க மத்திய அரசு முனைந்திருப்பது மிகவும் அருவெறுக்கத்தக்கதாகும். இறைவன் வகுத்துள்ள விதிகளுக்கே இது மிகப்பெரிய சவாலாகும்.

முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதர் ஆதம் என்றும் அவருக்கு ஜோடியாக ஹவ்வா என்ற பெண்ணும் படைக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இதைப் போலவே கிறிஸ்து வர்களின் பைபிளிலும் உலகில் தோன்றிய முதல் மனிதர் ஆதாம் என்றும் அவரின் துணையாக ஏவால் என்ற பெண்ணும் தோன்றியதாக குறிப்பிடப்படுகிறது. பகவத் கீதையில் கூட ஆதி என்ற துவக்கம் சிவன் என்றும் அவரின் துணையாக பார்வதி என்றும் குறிப்பிடப்படுகிறது. இப்படி எல்லா சமயத்தினராலும் குறிப்பிடப்படுகின்ற உலகில் தோன்றிய முதல் மனிதர் என்ற நிலைப்பாட்டை சற்று ஆராய்ந்து பார்த்தால் ஒரு ஆணுக்கு ஜோடியாக ஒரு பெண்ணாகவும், ஒரு பெண்ணுக்கு ஜோடியாக ஒரு ஆணாகவும் தான் இருக்க முடியும் இருக்கவும் வேண்டும் என்ற தத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சிறு பிள்ளைக்கும் பளிச்சென புரியும் இந்த இறைத் தத்துவம் இன்றைய ஆட்சி யாளர்களுக்கு புரியாமலா போகும்? ஒரு ஆண் இன்னொரு ஆணுடனும் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடனும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்ற ஓரினச் சேர்க்கையை ஆதரிப்போர் மனித சமுதாயத்தின் விரோதி களாகவே இருக்க முடியும்! இத்தகையவர்கள் மனிதருக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் தான் விரோதிகள்.

ஒரு பக்கம் எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய்க்கெதிராக மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் செய்யும் ஆட்சியாளர்கள் மறு பக்கம் எய்ட்ஸ் என்னும் கொலைகாரனுக்கு சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்க நினைப்பது எவ்வகையில் நியாயம்? இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் எத்தனையோ பிரிவுகள் உயிரோட்டம் கொடுக்கப்படாமல் முடமாகி கிடக்கும் போது ஓரினச் சேர்க்கைக்கெதிரான இந்திய தண்டனை சட்டத்தை மட்டும் மாற்றி அமைக்கத் துடிப்பது ஏன்?

இந்திய அரசியல் சாசன சட்டவிதி 45 என்பது அனைவருக்கும் இலவச கல்வி என்பது தான். ஆனால் இன்றோ குழந்தைகளை மழலையர் பள்ளியில் சேர்ப்பதற்கே பல ஆயிரங்களை கொட்டி தீர்க்க வேண்டியுள்ளது. அந்தளவுக்கு கல்விக் கூடங்களெல்லாம் வியாபார ஸ்தலங்களாகி விட்டன.

அரசியல் சட்டவிதி 46 அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் எனக் கூறுகிறது. சட்டமியற்றி 60 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது, ஆனால் இன்று வரைக்கும் தெருக்குழாயில் வரும் குடிநீரில் சாக்கடையும் கலந்து வருகிறதே ஆட்சியாளர் களால் இதை தடுக்க முடிகிறதா? மனித உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் சுகாதார சீர்கேடு தடுக்கப்பட வில்லை. இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாத மத்திய அரசு அவசிய அவசரமாக எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி அரக்கனுக்கு சாதகமாக ஓரினச் சேர்க்கை தவறல்ல என்ற நச்சுக் கருத்தை ஆதரிக்க முன் வருவது வெட்கக் கேடானதாகும்.

இந்திய தேசத்தின் சுதந்திர போராட்டத்தந்தையான மகாத்மா காந்தி வலியுறுத்தியது பூரண மது விலக்கு! இதை அரசியல் சட்டவிதி 46- ன் ஒரு பகுதியில் நாடு முழுவதும் பூரண மது விலக்கு அமுல் படுத்தப்பட வேண்டும் என கூறுகிறது. எத்தனை மாநிலங் களில் இந்த மது விலக்கு அமுலில் உள்ளது? நாடு சுதந்திரம் அடைவதற்கு காங்கிரஸே காரணம் என பெருமைப் பட்டுக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் ஆளும் மாநிலங் களிலேயே மதுவிலக்கு அமுல்படுத்தப்படாதது வேதனைக்குரியதல்லவா?

பா.ஜ.க. மதவாதக் கட்சியென்றாலும் அதனுடைய ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில் பூரண மது விலக்கு அமுல்படுத்தப்பட்டிருப்பது பெருமைக்குரிய விஷயம் தானே! அங்கு தான் மகாத்மா காந்தியும் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகாத்மா காந்தியின் கொள்கைக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கும் பா.ஜ.க இந்த விஷயத்தில் காங்கிரஸை விட மேலோங்கியே நிற்கிறது.

போலியான தேசிய வாதம் பேசும் கதர் சட்டைக் காரர்களின் சமீபத்திய எந்த நடவடிக்கையும் மக்கள் போற்றும் வகையில் இல்லை என்பது கசப்பான உண்மை தான். அதனுடைய அடையாளமாகத்தான் தற்போது ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவின் நிலை என்னவென்பதை வெளிப் படையாக அதன் தலைமை அறிவிக்க வேண்டும் இந்திய பாரம்பரியத்தையும் கலாச்சார ஒழுக்கத்தையும் யார் பாதுகாக்கிறார்களோ இல்லையோ? கண்டிப்பாக தமிழர்கள் பாதுகாப்பார்கள். தமிழர்களின் இந்த எண்ணவோட்டத்தை தமிழக அரசு அப்படியே மத்திய அரசுக்கு குறிப்பாக காங்கிரஸுக்கு உணர்த்த வேண்டும்.

ஓரினச் சேர்க்கை யென்பது ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் நாசம் விளைவிக்கும் கேடுகெட்ட செயல் தான் என பறை சாற்றுவதின் மூலம் தமிழர்களின் கண்ணியமும், ஒழுக்கமும் பார் போற்றப்பட வேண்டும். ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு என்ற விபரீத முயற்சியை கைவிட்டு விட்டு மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்துமாறு மத்திய அரசை வற்புறுத்த ஒவ்வொரு ஒழுக்க விரும்பி களும் குரல் கொடுக்க வேண்டும். இதை ஓர் அகிம்சை ரீதியில் அணுகுவோம்! ஒழுக்கமுள்ள சமுதாயம் உருவாகப் பாடுபடுவோம்!

Friday, July 17, 2009

இரும்புக்கடையில் வேலைபார்த்து பிளஸ் 2 முடித்தவர் மேல்படிப்பை தொடர கல்வி உதவி கோரும் முதுகுளத்தூர் மாணவர்

இரும்புக்கடையில் வேலைபார்த்து பிளஸ் 2 முடித்தவர் மேல்படிப்பை தொடர கல்வி உதவி கோரும் முதுகுளத்தூர் மாணவர்


கடலாடி, ஜூலை 13: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் ஜமால் முகமது. இவரது மகன் அஸ்பர் அகமது(17). இவர் சிறு வயதாக இருக்கும் போதே தந்தை ஜமால் முகமது இறந்து விட்டார். தாய் நர்கிஸ்ராணி கூலி வேலை செய்து படிக்க வைத்தார். இவரும் கடந்த சில மாதங்களாக உடல் சரியில்லாமல் உள்ளார். மாணவர் அஸ்ஃபர் அகமது அருகிலுள்ள இரும்புக்கடையில் கூலி வேலை செய்து தாயையும் கவனித்து, மேல்நிலை படிப்பையும் முடித்தார். முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த இவர் 1034 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

பொறியியல் படிக்க விரும்பிய மாணவர் அஸ்ஃபர் அகமது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தார். ஜூலை 21ம் தேதி சென் னையில் நடைபெறும் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள இவருக்கு அழைப்பு வந்துள்ளது. வறுமையின் காரணமாக கவுன்சலிங்கில் கலந்து கொள்ள முடியாமல் தவித்து வருகிறார். இதுகுறித்து மாணவர் அஸ்பர் அகமது கூறுகை யில், “எனது குடும்பம் ஏழ்மை யான குடும்பம். எனது சிறு வயதில் அப்பா இறந்து விட்டார். நானும், அம்மாவும் வறுமையில் உள்ளோம். அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. நான் இரும்புக்கடையில் வேலை பார்த்து வருகிறேன். இதில் கிடைக் கும் வருமானம் மூலம் எனது அம்மாவை கவ னித்து வருகிறேன். கூலி வேலை செய்து மிகவும் கஷ்டப்பட்டு மேல்நிலை கல்வியை முடித்தேன்.

பொறியியல் படிக்க விரும்பி விண்ணப்பம் செய்தேன். சென்னைக்கு ஜூலை 21ம் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது. இதற்கு ரூ.5 ஆயிரம் பணம் தேவை. பண வசதி இல்லாததால் என்னால் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. எனக்கு யாரேனும் உதவி செய்தால் படித்து நல்ல நிலைக்கு வந்து சமுதாய பணியாற்றுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். உதவி புரிய விரும்புவோர் 99651-84826 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

நன்றி தினகரன் நாளிதழ்.

Thursday, July 16, 2009

துபாயில் முதுகுள‌த்தூர் ப‌ள்ளி ப‌ழைய மாண‌வ‌ர்க‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

துபாயில் முதுகுள‌த்தூர் ப‌ள்ளி ப‌ழைய மாண‌வ‌ர்க‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0716-mudukullathur-school-old-students-meet.html

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=3074&Country_name=Gulf&cat=new

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=blogcategory&id=140&Itemid=210


துபாய் : துபாயில் முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் மேல்நிலைப்ப‌ள்ளி ப‌ழைய‌ மாண‌வ‌ர்க‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி 14.07.2009 செவ்வாய்க்கிழ‌மை மாலை ந‌டைபெற்ற‌து.

இந்நிக‌ழ்ச்சிக்கு ப‌ழைய‌ மாண‌வ‌ர் ச‌ங்க‌ நிர்வாகி இள‌ங்கோவ‌ன் த‌லைமை வ‌கித்தார். எம். காஜா ந‌ஜுமுத்தீன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.

இள‌ங்கோவ‌ன் த‌ன‌து த‌லைமையுரையில் முதுகுள‌த்தூரைச் சேர்ந்த‌ ப‌ள்ளிவாச‌ல் மேல்நிலைப்ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ள் ப‌ல‌ ஆண்டுக‌ளுக்குப் பின்ன‌ர் அமீர‌க‌த்தில் ச‌ந்திப்ப‌து மிக‌வும் ம‌கிழ்வினைய‌ளிக்கிற‌து. ப‌ள்ளிக்கால‌ நினைவுக‌ள் த‌ன்முன் நிழ‌லாடுவ‌தை உண‌ர்ச்சிப்பூர்வ‌மாக‌ விவ‌ரித்தார்.

சிற‌ப்பு விருந்தின‌ராக‌ ப‌ள்ளிவாச‌ல் ப‌ள்ளி பணிநிறைவு பெற்ற‌ ஆசிரியை அப‌ர‌ஞ்சி க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்தார். அவ‌ர் த‌ன‌து ப‌ள்ளிக்கால‌ நினைவுக‌ளை எடுத்துரைத்தார். அவ‌ர் த‌ன‌து வ‌குப்பில் ப‌யின்ற‌ மாண‌வ‌ர்க‌ளையும், அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளையும் அமீர‌க‌த்தில் ப‌ல‌ ஆண்டுக‌ளுக்குப் பின்ன‌ர் சந்திக்கும் வாய்ப்பை ஏற்ப‌டுத்திய‌ நிர்வாகிக‌ளுக்கு ந‌ன்றியும், பாராட்டும் தெரிவித்தார். ஆண்டுக‌ள் ப‌ல‌ ஆனாலும் த‌ன் மீது மாறாத‌ அன்பு கொண்டுள்ள‌ மாணாக்க‌ர்க‌ளை ந‌ன்றியுட‌ன் நினைவு கூர்ந்தார். தான் ப‌டித்த‌ ப‌ள்ளிக்கும், ஊருக்கும் பெருமை சேர்க்கும் வ‌ண்ண‌ம் ப‌ணிசெய்யும் நாட்டிலும் திக‌ழ்ந்திட‌ வேண்டும் என்றார். ஆசிரியைக்கு நினைவுப் ப‌ரிசும், பொன்னாடை அணிவித்தும் கௌர‌விக்க‌ப்ப‌ட்டார்.

நிக‌ழ்வில் ஹிதாய‌த்துல்லாஹ், ஜாஹிர் உசேன், குமார், ஜ‌ஹாங்கீர், ஹ‌பீப் திவான், முஹ‌ம்ம‌து, ஜ‌மால், க‌னி, அஹ்ம‌த் இம்தாதுல்லாஹ் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.










Tuesday, July 7, 2009

முதுகுளத்தூரில் ரஹ்மானியா நிறுவனங்கள்

முதுகுளத்தூரில் ரஹ்மானியா நிறுவனங்கள்

முதுகுளத்தூரில் நய்னா முஹம்மது – காதரம்மாள் டிரஸ்ட் 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 16 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறது.

ரஹ்மானியா எத்தீம் கானா

1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரஹ்மானியா எத்தீம் கானா என்னும் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் 25 வெளியூர் மாணவர்கள் தங்கி ஓதிப்படித்து வருகின்றனர். இவர்களுக்கு உணவு, உடை, பள்ளிக் கட்டணம் அனைத்தும் டிரஸ்ட் சார்பாக வழங்கப்படுகின்றன.

ரஹ்மானியா மத்ரஸா

பெண்களுக்காக தனியாக நிஸ்வான் மத்ரஸா நடத்தி சிறுமிகளுக்கு குர்ஆனும், தீனியாத்தும் போதிக்கப்படுவதுடன் 3 ஆண்டுகள் பாடத்திட்டத்தில் கற்றுத் தேறிய மாணவி களுக்கு “ஆலிமா” ஷனது வழங்கப்படுகின்றது.

ரஹ்மானியா நூலகம்

பெண்களுக்காக தனியாக நூலகம் ஒன்று ஏற்படுத்தி ஒரு பெண் நூலகரை முழு நேரப் பணியில் அமர்த்தி ஆயிரக் கணக்கான இஸ்லாமிய, மற்றும் பொது நூல்களைக் கொண்டு பெண்கள் மட்டும் படிக்க வகை செய்துள்ளனர்.

ரஹ்மானியா ஐ.டி.ஐ

ரஹ்மானியா ஐ.டி.ஐ ஏற்படுத்தி அனைத்து சமுதாய மக்களும் தொழிற்கல்வி கற்க வகை செய்துள்ளனர். எலக்ட்ரீசியன், வயர்மேன், பிட்டர் ஆகிய 3 பிரிவுகள் போதிக்கப் படுகின்றன.

மிகக்குறைந்த கட்டணத்தில் சேவை மனப்பான்மையுடன் நடத்தப்படுகின்றது. மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்த பலர் வெளிநாடுகளில் பணி செய்து சிறப்புடன் உள்ளனர்.

தேசிய விருது பெற்றவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான டாக்டர். ஹாஜி S. அப்துல் காதர் M.A,B.ED,D.LiT. அவர்கள் இந்த டிரஸ்டினுடைய மானேஜிங் டிரஸ்டியாக இருந்து சேவை செய்து வருகிறார்.