Tuesday, November 13, 2007

அசன் தந்த இசைவு ...............

அசன் தந்த இசைவு


நான் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக அபிராமம் அருகில் உள்ள கீழக்குளம் என்ற கிராமத்தில் பணியாற்றியுள்ளேன். ( 1962 முதல் 1963 வரை ).இச்சிற்றூர் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது.இந்த ஒன்றியத்தின் தலைவராக இருந்தவர் அசன் முஹம்மது எம்.ஏ.பி.எல். அவர் அன்று என் மேல் கொண்ட அன்பை இன்றும் மாறாத வகையில் வைத்துள்ள மாமனிதர். ஊழலற்ற அரசியல்வாதி. ஊரார்க்கு உழைப்பதற்காகவே பிறவி எடுத்த பெருமகன். அன்பு, பாசம், அடக்கம், உயர்வு அனைத்தும் நிறைந்த இச்சால்புடையார் இன்றும் என்னை என் இல்லம் வந்து பார்த்துப் பாராட்டி அன்பு செலுத்திச் செல்வது வழக்கம். இவரின் உயர்ந்த ஒழுகலாறுகளால் இவருக்கு நம் நாட்டு அரசியலில் பதவி கிடைக்கா விட்டாலும் இவர் பிள்ளைகள் வெளிநாடுகளில் சிறப்பாக வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவர் எச். அசன் முஹம்மது எம்.ஏ. அவர்கள்.

ஒருநாள் வழக்கம் போல் இன் இல்லத்திற்கு வந்த அசன் முஹம்மது அவர்களிடம் என் துருக்கிப் பயணம் பற்றிக் கூரி, உங்கள் மகன் பணியாற்றும் இரகுமான் நிறுவனத்தின் கிளைகள் துருக்கியில் ஏதாவது இருக்குமா ? என்று கேட்டேன்.

நீங்கள் உலகமெல்லாம் தமிழ் வளர்ப்பதைக் கண்டு மகிழ்பவர்களில் தலையானவன் நான் எனபதை அறிவீர்கள். சாதாராண ஆரம்பப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி இன்று பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெற்று உயர்ந்த முன்னேற்றம் கண்டுள்ள உங்களுக்கு இன்ஷா அல்லாஹ் என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். அபுதாபியிலுள்ள என் மகனுக்கு எழுதுகிறேன் என்றார்.

வருமுன் காக்க இரு மடல்கள்

சில நாள்கள் கழித்து அவரின் மகனிடமிருந்து எனக்கு மடல் வந்தது. அம்மடலில் கண்ட செய்தியாவது :

அசன் புதல்வர் விடுத்த நிசமனத்தின் நீட்டோலை

இறையருள் முன்னிற்க

பேரன்புள்ள ஐயா பெருங்கவிக்கோ அவர்களின் சமூகத்திற்கு அசன் முஹம்மது வரையும் மடல். நலம் தங்களின் நலனுக்கும் தங்களின் குடும்பத்தினரின் நலத்திற்கும் எல்லாம்வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவனாக இருக்கிறேன்.

தாங்கள் துருக்கி நாட்டிற்குச் செல்வது குறித்து என்னுடைய அத்தா அவர்கள் தெரியப்படுத்தி கடிதம் எழுதி இருக்கிறார்கள். அத்துடன் ஒரு தமிழ்க் கவிதையை கெளரவித்துப் பட்டங்கள் வழங்கும்பொழுது, அது ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமையாக இருக்கும். குறிப்பாக தாங்கள் பெறும் பெருமை எங்கள் குடும்பத்தில் உள்ள ஓர் அங்கத்தினருக்கு கிடைக்கும் பெருமை என்று நினைத்து மகிழ்கிறேன். தங்களுடைய பயணங்கள் இனிது நடந்து முடிய என்னுடைய வாழ்த்துக்கள்.

தங்களின் துருக்கிப் பயணம், துருக்கி நாட்டில் குறைவாக இருப்பதாகக் கருதினாலும், வேறு உதவிகள் அங்கு உங்களுக்குத் தேவைப்பட்டால் துருக்கியில் இருந்து எனக்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

மற்றவை தங்களின் அன்பு மடல் கண்டு

தங்களின் அன்புள்ள

ஹஸன் அஹமத்

( துருக்கியில் பெருங்கவிக்கோ பயண நூலிலிருந்து ) 1992

நவம்பர் 14 ..............

நவம்பர் 14 குழந்தைகள் தினம். இந்த இளந்தளிர்களின் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில் இன்னொன்றையும் நினைவுகூர வேண்டும். அதே நவம்பர் 14 'உலக சர்க்கரை குறைபாடு' உடையவர்களின் தினமும் கூட. சர்க்கரை நோய் என்பது பெரியவர்களை ஆட்கொள்ளும் நோய் என்பதுதான் பரவலாக எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் இளந்தளிர்களையும் அது மிகவும் அலைக்கழிக்கும் என்பதுதான் உண்மை. பிறவியிலேயே அல்லது இளம் வயதிலேயே ஏற்படும் சர்க்கரை நோயுடன் போராடும் சிறியோரும் அவர்தம் பெற்றோரும் படும் தொல்லை அளவிலாதது.

ஆனால் இன்றைய நவீன மருத்துவத்தின் உதவியாலும் அந்நோயைப் பற்றிய அறிவைப் பெற்றிருப்பதாலும் இந்நோயைச் சமாளிப்பது சாத்தியமாகியிருக்கிறது.

"என்ன சாப்பிடுகிறீர்கள்? 'டீ' அல்லது 'காபி'? - நண்பர்கள் சிலர் நம் இல்லத்திற்கு வரும்போது வழக்கம்போல் வினவினால், "ஏதேனும் ஒன்று... ஆனால் சர்க்கரை இல்லாமல்..." என்று சிலர் சொல்லக் கேட்பது வழக்கமாகிவிட்டது. 40 வயதிற்கு மேலுள்ளவர்களில் பத்துப் பேரைச் சந்தித்தால் அதில் ஒருவருக்காவது இந்நோய் இருக்கிறது. இன்று அன்றாடம் எப்படி ஒருவருக்கொருவர் இரத்த அழுத்த
அளவை விசாரித்துக் கொள்கிறோமோ அதே போல் சர்கரையின் அளவைப் பற்றியும் விசாரித்துக் கொள்வதைப் பார்க்கிறோம். கடந்த 40 ஆண்டுகளில் பத்து மடங்காக உயர்ந்து காணப்படும் இந்நோய், வேறு சில நோய்களின் தாயாக அமைந்து விடுகிறது. இந்த நோயைப் பற்றிய அறிவு நோயுற்றிருப்பவருக்கு இருப்பது மட்டுமல்லாமல் அவரை நெருங்கி இருப்பவருக்கும் தேவை. முதலில் இது
ஒரு நோய்தானா என்ற வினா தொக்கி நிற்கிறது. இல்லை; இது ஒரு நோய் இல்லை - ஒரு குறைபாடு. எப்படி ஒருவருக்கு உடலுறுப்பு ஒன்றில் ஊனம் ஏற்படுகிறதோ அதேபோல்தான் இதுவும். இது தொற்று அல்ல. உள்ளுறுப்பில் ஏற்படும் ஓர் ஊனம். Diabetes mellitus என்ற முழுப் பெயருடன் குறிக்கப் படும் இந்தக் குறைபாடு, பழங்காலம் தொட்டே அறியப் பட்டு வந்திருக்கிறது. 'இனிப்பு நீர்", "மதுர நோய்", "சர்கரை நோய்", "நீரிழிவு நோய்" என்ற பல பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. Diabetes mellitus என்ற பெயர் ஏற்படக் காரணமான ஒரு (ருசிகர?) தகவல்:
பழங்காலத்தில் வைத்தியர்கள் தன்னிடம் வரும் நோயாளியின் நோயின் தன்மையறிய அவர்களின் சிறு நீரைச் சுவைத்துப் பார்ப்பதுண்டாம். இந்த நோய் உள்ளவர்களின் சிறு நீர் இனிப்பாக இருக்கக் கண்டு "இனிப்பான சிறுநீர்" எனப் பொருள்படும் Diabetes mellitus என்ற பெயரை இட்டனராம்! சர்க்கரை நோய் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன.

வகை I (Type - I):
Juvenile diabetes-- இள வயது சர்க்கரை நோய் அல்லது Insulin dependant diabetes mellitus (IDDM)- இன்சுலின் (செலுத்தத்) தேவைப் படும் சர்க்கரை நோய்.
வகை - II (Type - II):: Adult onset diabetes - முது வயது சர்க்கரை நோய் அல்லது- Non insulin dependant diabetes mellitus (NIDDM) இன்சுலின் (செலுத்தத்) தேவையில்லாத சர்க்கரை நோய்
மூன்றாவது வகையாக கர்ப்ப கால சர்க்கரை நோய் (gestational diabetes) - இது ஒரு தற்காலிகமான நிலை. சில பெண்களுக்கு இது ஏற்படக் கூடும். பேறு காலம் முடிந்ததும் சரியாகிவிடும். இது கிட்டத் தட்ட இரண்டாம் வகை போன்றதுதான்.

மேற்க்கண்டவை ஒரு பொதுவான பகுப்பு. இரண்டாம் வகையைச் சார்ந்தவர்களும் இன்சுலின் எடுக்க வேண்டிய நிலை வரலாம். இன்சுலின் என்றால் என்ன, அதை ஏன் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது என்பது பற்றி ஒவ்வொரு வகையை விரிவாகக் காணும்போது விளங்கிக் கொள்ளலாம்.

முதலில் இந்த நோய் எப்படி ஏற்படுகிறது? நம் உடல் உள்ளுறுப்புகளில் ஒன்றான கணையத்தில் (pancreas) ஏற்படும் செயல்பாட்டு மாற்றம்தான் இதற்குக் காரணம். இந்தச் சுரப்பி, உணவு செரிக்கத் தேவையான சில இரசங்களைச் சுரப்பதோடு "இன்சுலின்" என்ற ஹார்மோனையும் சுரக்கிறது. நாம் சாப்பிடும் உணவு மூலம் பிற சத்துக்களும் கார்போ ஹைட்ரேட்டுகள் மூலம் உடலுக்கு - அதிலும் குறிப்பாக மூளைக்குத் தேவையான எரிபொருளான சர்க்கரையும் கிட்டுகின்றன. உடலுறுப்புக்களுக்கும் மூளைக்கும் செலவானது போக மீந்து நிற்கும் சர்க்கரையை என்ன செய்வது? இங்குதான் கணையத்திலிருந்து சுரக்கும் "இன்சுலின்" என்ற 'ஹார்மோன்' உதவுகிறது. அது இரத்தத்தில் மீந்திருக்கும் அதிகப் படியான சர்க்கரையை வேறு ஒரு பொருளாக (glycogen- கிளைக்கோஜன்) மாற்றி ஈரலில் சேமித்து வைக்க உதவுகிறது (பதார்த்தங்கள் மீந்துவிட்டால் 'வடாகம்' போடுவது மாதிரி!). அடுத்த உணவு கிட்டாத போதோ அல்லது உடலின் சக்தி செலவழிக்கப் படும்போதோ சேமித்து வைக்கப் பட்டிருக்கும் glycogen மீண்டும் சர்க்கரையாக மாற்றப் பட்டு உடலுறுப்புக்களுக்கு அளிக்கப் படுகிறது.

இப்படியான ஒரு செயல்பாட்டால் மீந்திருக்கும் சர்க்கரையை ஏதோ ஓர் காரணம் கொண்டு glycogenஆக மாற்றி சேமித்து வைக்க வகையில்லாதிருந்தால் இரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை தங்கிவிடும். அப்படித் தங்கினால் வேண்டாத விளைவுகளை அது ஏற்படுத்தும். அது என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்?

தொடர்ச்சிக்கு.... இங்கே. Part2 , Part3, Part4
கடந்த ஆண்டு எழுதிய இந்த கட்டுரை இணையத்தில் உள்ளன பார்வையிடவும்.


M.Hussainghani [ஹூஸைன்கனி] hussainghani@gmail.com

http://chittarkottai.com/kaayaa_pazhamaa/index.html