Tuesday, December 30, 2008

20 பைசாவில் உள்ளூர் அழைப்பு: வோடபோன் புதிய திட்டம்

20 பைசாவில் உள்ளூர் அழைப்பு: வோடபோன் புதிய திட்டம்


சென்னை, டிச. 29: வாடிக்கையாளர்கள் 20 பைசா கட்டணத்தில் உள்ளூர் அழைப்புகள் மேற்கொள்ளும் விதமாக வோடபோன் நிறுவனம் புதிய சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது.

"பிரெண்ட்ஸ் சர்க்கிள்' என்ற இத் திட்டத்தில் அதிகபட்சம் 5 உள்ளூர் வோடபோன் எண்களை வாடிக்கையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதில் ஒவ்வொரு நிமிஷத்துக்கும் 20 பைசா கட்டணம்.

இச் சலுகைக்கு போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.15-ம், பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.10-ம் மாதக் கட்டணமாக வசூலிக்கப்படும். இவ்வாறு சேர்க்கப்பட்ட எண்களை மாத இறுதியில் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் என்றும் அந்த நிறுவன செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Saturday, December 27, 2008

பக்ரைனில் திறந்த வாகனங்களில் செல்ல தொழிலாளர்களுக்கு தடை

பக்ரைனில் திறந்த வாகனங்களில் செல்ல தொழிலாளர்களுக்கு தடை

பக்ரைன் நாட்டில் திறந்த கனரக வாகனங்களில் தொழிலாளர்களை வேலைக்காக அழைத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இதற்கு இந்த வாரம் முதல் பக்ரைன் அரசு தடை விதித்து இருக்கிறது.

தொழில் நிறுவனங்கள் இதுபோல் தொழிலாளர்களை அழைத்துச்செல்லக் கூடாது என்றும், மீறி அழைத்துச்சென்றால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் பக்ரைன் அரசு எச்சரித்துள்ளது. மேலும் இதுபற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தையும் தொழிலாளர்களிடையே அரசு தொடங்கி இருக்கிறது. தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் தீவிர விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி இந்த தடை கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது

அயல்நாட்டு வேலை நிறுவன பதிவைப் புதுப்பிக்க புதிய திட்டம்

அயல்நாட்டு வேலை நிறுவன பதிவைப் புதுப்பிக்க புதிய திட்டம்

சென்னை, டிச. 26: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் தங்களது பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, பதிவை புதுப்பிக்காதவர்கள் 1.1.2009-ம் தேதி முதல் 31.3.2009 வரை புதுப்பிக்கலாம். தங்கள் பதிவு எண், பணி தொடர்பான விவரங்கள், அனைத்துச் சான்றுகளின் இரண்டு நகல்கள் ஆகியவற்றுடன் ரூ. 112-க்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும்.

வரைவோலையை OVERSEAS MANPOWER CORPORATION LTD என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-20 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Sunday, December 21, 2008

டெல்லியில் இந்திய தூதர்கள் மாநாடு

டெல்லியில் இந்திய தூதர்கள் மாநாடு
நாளை தொடங்குகிறது


புதுடெல்லி, டிச.21-

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய நேரடி தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளில் உள்ள இந்திய தூதர்களின் இரண்டு நாள் மாநாடு டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றி வரும் இந்திய தூதர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

இந்த மாநாட்டை மத்திய வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைக்கிறார். இரண்டாவது நாளான 23-ந் தேதி அன்று பிரதமர் மன்மோகன் சிங் சிறப்புரையாற்ற இருக்கிறார். `தற்போதைய சூழ்நிலையில், சர்வதேச அரங்கில் இந்தியாவின் கருத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும்' என்பது குறித்து இந்திய தூதர்களுக்கு இருவரும் விளக்கி கூறுவார்கள்.

இது தவிர மும்பை தாக்குதல், பாகிஸ்தான் உளவு அமைப்புக்கும், தீவிரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு, இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதட்டம் போன்றவை குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

தரமற்ற எழுத்துகள் இயற்கைக்கு செய்யும் துரோகம்: "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்

தரமற்ற எழுத்துகள் இயற்கைக்கு செய்யும் துரோகம்: "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்

மதுரை, டிச. 20: சமுதாயத்துக்குப் பயன்படாத வகையில் தரமற்ற எழுத்துகளைத் தாங்கிவரும் புத்தகங்கள் இயற்கைக்குச் செய்யும் துரோகம் என "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் கூறினார்.

மதுரை தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கல்லூரி சார்பில் சனிக்கிழமை "தேமதுரத் தமிழோசை' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் "நல்ல காகிதம் செய்வோம்' எனும் பொருளில் அவர் பேசியது:

தமிழகத்தில் தமிழை வளர்ப்பதற்காக, மீண்டும் தமிழின் பெருமையை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்புதான் மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்.

அப்படிப்பட்ட தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ், தமிழன் என்று பேசித்திரியும் நம்மால் நூற்றாண்டு விழா எடுக்க முடியவில்லையே ஏன் என்கிற, எனது ஆதங்கத்தை எழுத்தாக கொட்டித் தீர்த்தேன். இப்போது நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. மகிழ்ச்சி, பாராட்டுகள்.

மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவியபோது, ஒரு நல்ல தமிழ்த்தாய் வாழ்த்து எழுதப்பட வேண்டும் என்று பாண்டித்துரை தேவர் விரும்பினார்.

சங்கம் வெளிக்கொணரும் "செந்தமிழ்' பத்திரிகையில் ஒரு போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? ரூபாய் நூறு! அப்போது தங்கம் ஒரு பவுன் ரூ.8-க்கு விற்ற காலம். புதுவையிலிருந்து கவிஞர் பாரதிதாசன் உள்ளிட்ட பாரதியின் நண்பர்கள், அவர்தான் தமிழ்த்தாய் வாழ்த்து எழுத வேண்டும் எனவும், அதற்காக அந்தப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அழைத்தனர்.

ஆனால் மகாகவி சுப்பிரமணிய பாரதி அந்தப் போட்டியில் கலந்துகொள்ள மறுத்தார். ஏன் தெரியுமா? பணத்துக்காகத் தமிழை வாழ்த்துவதா? அதை நான் செய்வதாய் இல்லை என்றார் அவர்.

தமிழுக்கு நல்ல வாழ்த்து கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ்த்தாய் வாழ்த்தை எழுத வேண்டும் என பாரதியாரிடம் கேட்டுக் கொண்டதாக பாரதிதாசன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாரதியாரை எழுதவைக்க சிரமப்பட்டோம் என்பதையும் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.

தரமில்லாத கவிதை தமிழ்த்தாய் வாழ்த்தாகி விடக்கூடாது என்கிற பாரதிதாசனின் வற்புறுத்தலால் எழுதப்பட்டதுதான் பாரதியின் "செந்தமிழ் நாடெனும் போதினிலே..' என்கிற கவிதை.

சமீபத்தில் "சாளரம்' நூல் வெளியீட்டு விழாவில் நான் நல்ல படைப்புகள் வரவேண்டும் எனக் குறிப்பிட்டேன். அடிப்படையில் புத்தகங்களை தேவையில்லாமல் வெளியிடுவதை நான் ஆதரிப்பவன் அல்ல. நல்ல படைப்புகள் வரவேண்டுமே தவிர குப்பை கூளங்கள் நூலக அலமாரிகளில் அடுக்கப்படக் கூடாது.

எழுத்தாளனைப் பொருத்தவரை எழுதுவதெல்லாம் நல்ல எழுத்தாக இருக்கலாம். ஆனால் காலத்தைக் கடந்து ஓர் எழுத்து நிற்குமானால் அதுதான் சிறந்த எழுத்து.

ஏதோ வாசித்துவிட்டு தூக்கிப்போடுவதை எல்லாம் இலக்கியமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு காகிதத்துக்குப் பின்னாலும் ஒரு மரம் அழிக்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

நல்ல எழுத்துக்காக இயற்கை சற்று சேதப்படலாம். ஆனால் தரமற்ற படைப்புகளுக்காக இயற்கை அழிக்கப்படுவதா? நாம் நல்ல படைப்புகளை மட்டுமே ஆதரிக்க வேண்டும் என்ற கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.

நாளைய தலைமுறைக்காக எழுத்து அமையுமானால் அதை நிறையவே எழுதலாம். இலக்கியம் என்பது நம்மைக் கடந்து நமது வாழ்வைக் கடந்து காணப்பட வேண்டும்.

எழுத்து நல்லதாக இருந்தால் மட்டும்தான் அதைத் தாங்கிவரும் காகிதமும் நல்லதாக அமையும். இல்லை என்றால் அதற்குப் பெயர் காகிதமல்ல, குப்பை என்றார் வைத்தியநாதன்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் முகவை மன்னர் நா.குமரன்சேதுபதி தலைமை வகித்தார். செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் ரா.குருசாமி, தமிழ்ச் சங்கச் செயலர் ரா.அழகுமலை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

கல்லூரி முதல்வர் க.சின்னப்பா வரவேற்றார். பேராசிரியை தனலெட்சுமி நன்றி கூறினார்.

சென்னையில் ``ரெயிலே வராமல் ஒரு ரெயில்நிலையம்''

சென்னையில் ``ரெயிலே வராமல் ஒரு ரெயில்நிலையம்''
இரவில் காதலர் பூங்காவாக மாறுகிறது


சென்னை, டிச.21-

சென்னையில் ரெயிலே வராமல் ஒரு ரெயில் நிலையம் அண்ணாநகரில் உள்ளது. இரவு நேரங்களில் காதலர்களின் பூங்காவாகவும் மாறிவிடுகிறது.

அண்ணாநகர் ரெயில்நிலையம்

சென்னை பெரம்பூரில் ரெயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை (ஐ.சி.எப்) உள்ளது. இங்கு தயார் செய்யப்படும் பெட்டிகளை வெளியே அனுப்புவதற்காக வில்லிவாக்கம் - ஐ.சி.எப் இடையே 3.09 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டு அது செயல்பட்டு வருகிறது.

இந்த தண்டவாளத்தை 7.29 கோடி செலவில் பலப்படுத்தி அந்த மார்க்கத்தில் பயணிகள் ரெயில் சேவையையும் தொடங்க தெற்கு ரெயில்வே முடிவு செய்தது. அந்த இடைப்பட்ட இடத்தில் பாடி, அண்ணாநகர் ஆகிய 2 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டன. மேலும், அண்ணாநகரில் இருந்து கோயம்பேடு வரை ரெயில்வே பாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2003-ம் ஆண்டு அப்போது மத்திய ரெயில்வே இணை மந்திரியாக இருந்த ஏ.கே.மூர்த்தி அந்த மார்க்கத்தில் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

அண்ணாநகர் ரெயில் நிலையத்தால் திருமங்கலம் சாலை, லெட்சுமிபுரம், ஐகோர்ட்டு காலனி, நாவலர் நகர், தென்றல்காலனி, முல்லை நகர், கம்பர் குடியிருப்பு, அகத்தியர் நகர், குமாரசாமி நகர், பொன்விழா நகர், லெட்சுமி தெரு உள்பட அந்த பகுதியில் இருந்தவர்கள் பயன் அடைந்தனர்.

இந்த நிலையில் பாடி சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. அதை காரணம் காட்டி அண்ணாநகருக்கு இயக்கப்பட்டு வந்த ரெயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. மேம்பாலப்பணிகள் முடிந்த பிறகு அண்ணாநகருக்கு ரெயில் விடப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களாக அங்கு ரெயில் எதுவும் வருவதில்லை. ஐ.சி.எப்-ல் தயாரிக்கப்படும் ரெயில் பெட்டிகள் மட்டுமே அந்த வழியில் செல்கின்றன.

சமூக விரோத செயல்

ரெயிலே வராத அண்ணாநகர் ரெயில் நிலையம் தற்போது பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடக்கின்றன. பகலில் மட்டும் எப்போதாவது ரெயில்வே பாதுகாப்பு போலீசார் வந்து பார்த்து விட்டு செல்வதுடன் சரி. இதன் காரணமாக அண்ணாநகர் ரெயில் நிலையம் இரவு நேரங்களில் காதலர்களின் பூங்காவாக மாறிவிடுகிறது. ஆள் அரவம் இல்லாத ஒதுக்குப்புறமாக ரெயில் நிலையம் அமைந்திருப்பது காதலர்களுக்கு வசதியாக உள்ளது.

காதலர்களை தவிர, இரவு நேரங்களில் அங்கு விபசாரமும் கொடிகட்டிப்பறப்பதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். பகல் நேரங்களில் அந்த ரெயில் நிலையத்தில் வாலிபர்கள் மது அருந்துகிறார்கள். சமூக விரோத செயல்கள் நடைபெற்று வரும் அண்ணாநகர் ரெயில் நிலையத்தை பராமரிக்க வேண்டும் என்றும், கோயம்பேடு வரை ரெயில் மார்க்கத்தை நீட்டினால் ஏராளமானோர் பயன்பெறுவார்கள் என்றும் அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர். இரவு நேரங்களில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரை நிறுத்தி அங்கு நடைபெறும் குற்ற சம்பவங்களை குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்தனர்.

நடிகர்களிடம் நாடு என்ன தெரிந்து கொள்ளப் போகிறது?: சிலம்பொலி செல்லப்பன் கேள்வி

நடிகர்களிடம் நாடு என்ன தெரிந்து கொள்ளப் போகிறது?: சிலம்பொலி செல்லப்பன் கேள்வி



சென்னை கன்னிமாரா பொது நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் "திருக்குறள் வ.உ.சிதம்பரனார் உரை' என்ற நூலை சிலம்பொலி செல்லப்பன் வெளியிட அதைப் பெற்றுக் கொள்கிறார் வ.உ.சி. பேரன் சிதம்பரம். உடன் (இடமிருந்து) முனைவர் இரா.குமரவேலன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் ஒüவை நடராஜன், இ.சுந்தரமூர்த்தி, கவிஞர் ஈரோடு தமிழன்பன், முனைவர் இராம.குருநாதன்.


சென்னை, டிச. 20: அனைத்துப் பண்டிகை நாள்களிலும் தொலைக்காட்சி, வானொலியில் நாள் முழுவதும் நடிகர், நடிகைகளே ஆக்கிரமிப்பதால் நாடு அவர்களிடமிருந்து என்ன தெரிந்துகொள்ளப் போகிறது தெரியவில்லை என்று சிலம்பொலி செல்லப்பன் கூறினார்.

சென்னை கன்னிமாரா நூலகத்தில் சனிக்கிழமை "பாரி நிலையம்' சார்பில் வ.உ.சியின் திருக்குறள் உரை நூல் வெளியீட்டு விழாவில், நூலை வெளியிட்டு அவர் பேசியது:

"நாட்டுக்கு உழைத்தவர்களை மறந்துவிடுவது வழக்கமாக உள்ளது. இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த வ.உ.சி., ""மன்னிப்பு கேட்டால் போதும், விடுதலை செய்கிறேன்'' என்ற போதும் மன்னிப்பு கேட்க மறுத்தார். மற்றவருக்கு சிறப்பான விழாக்கள் கொண்டாடும்போது வ.உ.சிக்கு விழாக்கள் இல்லை என்பது வருத்தம்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒüவை நடராஜன்: திருக்குறளின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் உரையோடு படித்து தமிழ் மக்கள் பாராயணம் செய்ய வேண்டும் என்றார் வ.உ.சி.

திருக்குறளில் அறப்பால் என்ற நூலை வெளியிட்டுள்ளார். வ.உ.சியின் நிறைவேறாத இருபெரும் கனவான தேச விடுதலை அவர் மறைந்த 11 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்தது; 68 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குறள் உரை நூலும் வெளியாகியுள்ளது என்றார்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி: வ.உ.சி முதலில் எழுதிய கட்டுரை கடவுளும் பக்தியும் ஆகும். வ.உ.சி என்றாலே நெற்றியில் திருநீறு அணிந்திருப்பவர்; திருக்குறளில் இடம்பெரும் கடவுள் வாழ்த்து அதிகாரம் திருவள்ளுவர் எழுதியதா? சொற்களோ பொருள் முறையோ ஐயமாக உள்ளது.

வான் சிறப்பு, நீத்தார் பிறப்பு, உரைப்பாயிரம், மெய் உணர்தல், துறவும் வள்ளுவர் எழுதியதாக இருக்காது என்று மறுக்கிறார்.

வழிவழியாக வரும் 3 அதிகாரத்தில் வ.உ.சிக்கு உடன்பாடில்லை. ஆனால் அவர் எழுதிய திருக்குறளில் அதை நீக்க விரும்பவில்லை என்றார்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன்: பாரி நிலைய உரிமையாளர் செல்லப்பன் 60 ஆண்டு பேணி பாதுகாத்த வ.உ.சியின் கையெழுத்துப் பிரதியை அவரது மகன் முயற்சியில் வெளிவந்துள்ளது மகிழ்ச்சிக்குரியது.

வ.உ.சி ஆன்மிகவாதி, அரசியல்வாதி, பதிப்பாசிரியர், இதழ் ஆசிரியர், தொழிற்சங்கவாதி, கப்பல் வர்த்தகர், வழக்கறிஞர் என பன்முகம் கொண்டவர் என்றார் தமிழன்பன்.

வ.உ.சி எழுதிய அமர்ஜோதி, மனம்போல வாழ்வு, அகமே புறம், வளமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம், மெய்யறிவு, மெய்யறம், தொல்காப்பியம் இளம்புராணம், சுயசரிதை, திருக்குறள், வ.உ.சி கட்டுரைகள் ஆகிய நூல்களை பாரி நிலையம் வெளியிட்டுள்ளதாக அதன் உரிமையாளர் செ. அமர்ஜோதி தெரிவித்தார்.

Thursday, December 11, 2008

பரமக்குடியில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

பரமக்குடியில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன

பரமக்குடியில் தியாகத்திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 09 டிசம்பர் 2008 செவ்வாய்க்கிழமை மாலை கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கீழமுஸ்லிம் ஜமாஅத் சபை தலைவர் எஸ்.என்.எம். முஹம்மது யாக்கூப் தலைமை தாங்கினார். கீழ முஸ்லிம் ஜமாஅத் சபை செயலாளர் எஸ்.என்.ஏ. முஹம்மது ஈசா, மேல முஸ்லிம் ஜமாஅத் தலைவர் அப்துல் கபூர், ரயில்வே பள்ளி தலைவர் ஆர் எஸ் ஒய். பஷீர் அஹ்மது, தெற்குப் பள்ளி தலைவர் முத்து நைனார், கொல்லம்பட்டரை ஜமாஅத் தலைவர் நைனா முஹம்மது, பாரதி நகர் ஜமாஅத் தலைவர் வழக்கறிஞர் ஏ கமால், எஸ்.ஆர்.பட்டணம் ஜமாஅத் தலைவர் நைனா முஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஜவ்வாதுப் புலவர் மன்ற தலைவர் டபிள்யூ. நூருல் அமீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பள்ளி மாணவர்களுக்கு ஹதிஸ் ஒப்பித்தல், திருக்குர்ஆன் மனனப் போட்டி, பாங்கு சொல்லும் போட்டி,கயிறு இழுக்கும் போட்டி,இறகுப் பந்து
போட்டி, இஸ்லாமியப் பாடல்கள் போட்டி உளிட்ட எட்டு போட்டிகள் பரமக்குடியில் உள்ள ஏழு மதரஸா மாணாக்கர்களுக்கு நடத்தப்பட்டன. இதில் சுமார் 160 க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கி பரமக்குடி எஸ்.டி. கூரியர்ஸ் உரிமையாளர் காசிம் முஹம்மது, கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் ஜி.எம். ஷேக் தாவுது, ரோட்டரி சங்க தலைவர் சாதிக் அலி,நகர் மன்ற உறுப்பினர்கள் அப்துல் மாலிக், அஹமது மீர் ஜவ்வாது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பரமக்குடி நகர் தலைவர் ஏ.பி. சீனி அலியார், கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளி தாளாளர் சாதிக் பாட்சா, கேஜே மேல்நிலைப்பள்ளி தாளாளர் அப்துல் ரஹீம், கேஜே நர்சரி தொடக்கப்பள்ளி தாளாளர் முஹம்மது உமர், தொழிலதிபர் கான், சலாம் டிராவல்ஸ் அதிபர் அப்துல் சலாம், பரமக்குடி இஸ்லாமிய இளைஞர் சபையின் ஆலோசகர் வழக்கறிஞர் ஒலி முஹம்மது, புரபஷனல் கூரியர்ஸ் அப்துல் அஜீஸ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கேடயமும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மத் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஇ, முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பஇ, மாவட்ட உலமாக்கள் சபை தலைவர் மௌலவி வலியுல்லாஹ் நூரி, கீழப்பள்ளி இமாம் மௌலவி ஜலாலுதீன் மன்பஇ, இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை
பேராசிரியர் முனைவர் எஸ். ஆபிதீன், ஹாஜி அலி பிர்தௌஸி உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் சமூக அக்கறையுடன் உரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியினை ஜவ்வாதுப் புலவர் மன்ற செயற்குழு உறுப்பினர் ஜெ. ஹிதாயத்துல்லாஹ் தொகுத்து வழங்கினார். ஜவ்வாதுப் புலவர் மன்ற செயலாளர் அஸ்கர் அலி நன்றியுரை நிகழ்த்தினார்.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே. ஏ. ஹிதாயத்துல்லாஹ் (9750105141) மற்றும் ஜவ்வாதுப் புலவர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது அரிதானது. பெருநாளன்றே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது சமுதாய மாணாக்கர்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது என பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். இது போன்ற நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்ற தங்களது அவாவினை ஜவ்வாதுப் புலவர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Monday, December 8, 2008

சாலை விபத்துகளை தடுக்க பிரத்யேக "சாஃப்ட்வேர்'!

சாலை விபத்துகளை தடுக்க பிரத்யேக "சாஃப்ட்வேர்'!


சென்னை, டிச. 8: தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்கப் பிரத்யேக சாஃப்ட்வேரை மாநில போக்குவரத்து திட்ட பிரிவு (எஸ்.டி.பி.சி.) வடிவமைத்துள்ளது.

இந்த சாஃப்ட்வேரை, கூடுதல் டிஜிபி எஸ்.கே. டோக்ரா தனது சொந்த முயற்சியில் வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழத்தில்தான் அதிகம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி.) புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி கூறித்து டோக்ரா கூறியதாவது:

மகாராஷ்டிரத்திலும், தமிழகத்திலும்தான் லட்சக்கணக்கான வாகனங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாவதற்கு இதுவும் ஒரு காரணம்.

சாஃப்ட்வேரால் விபத்துகளை தடுக்க முடியுமா? "கடந்த 3 மாதங்களாக இந்தப் புதிய சாஃப்ட்வேரின் கீழ் அனைத்து மாவட்ட போக்குவரத்து காவல் நிலையப் பகுதிகளில் நடக்கும் விபத்துகள் குறித்து புள்ளி விவரங்களை சேகரிக்கிறோம்.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் அன்றைய தினம் நடக்கும் விபத்து, அதில் தொடர்புடைய வாகனங்கள், விபத்து நடக்கும் நேரம் என பல விவரங்கள் குறித்து சாஃப்ட்வேர் மூலமாகப் பட்டியலாகப் பிரித்து விடுகிறோம்.

பின்னர் குறிப்பிட்ட காவல் நிலைய அதிகாரியைத் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட கால நேரத்தில் விபத்துகள் நடப்பதால் அங்கு போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியை முடுக்கிவிட உத்தரவிடப்படுகிறது.

அதுபோல குறிப்பிட்ட நேரத்தில் அதிகமாக உள்ள வாகன நெரிசலையும், விபத்தில் தொடர்புடைய வாகனங்கள் பஸ்ஸô, வேனா அல்லது இரு சக்கர வாகனமா என்று கணக்கெடுத்து வாகன ஓட்டிகளின் உரிய ஆவணங்களையும் சோதனையிட உத்தரவிடுகிறோம்' என்றார் டோக்ரா.

32 பேரில் இருந்து 20 பேர் ஆக குறைப்பு: "இதற்காக புதிய நெட்வொர்க் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்கள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்தப் புள்ளி விவரங்களை இணையதளத்தில் பார்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய சாஃப்ட்வேர் முறையால் விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் நாளொன்றுக்கு சாலை விபத்துகளில் 32 பேர் உயிரிழந்த நிலைமை மாறி, தற்போது 20 பேர் ஆக குறைந்துள்ளது.

நாட்டிலேயே, தமிழகத்தில்தான் இம்மாதிரியான சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி வருகிறோம். பிற மாநில காவல்துறையினரும் இம்மாதிரியான சாஃப்ட்வேரை பயன்படுத்த ஆவலாக உள்ளனர்' என்றார் அவர்.