அ.தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம்களுக்கு முறையான வாய்ப்பு தரப்படவில்லை
தேசியலீக் தலைவர் பசீர் அகமது பேட்டி
மதுரை, மே.1-
அ.தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம்களுக்கு முறையான வாய்ப்பு தரப்படவில்லை என்று தேசியலீக் தலைவர் பசீர் அகமது தெரிவித்தார்.
முதல்-அமைச்சர் உண்ணாவிரதம்
தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் பசீர் அகமது சாகிப், மதுரையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் பாளையங்கோட்டை, வாணியம்பாடி தொகுதிகளில் போட்டியிட்டோம். அதேபோல இந்த பாராளுமன்ற தேர்தலிலும் எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை. மேலும் அவர்களது கூட்டணியில் முஸ்லிம்களுக்கு முறையாக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மேலும் சிறுபான்மை மக்களின் எந்த கோரிக்கையும் அ.தி.மு.க.வினரின் தேர்தல் அறிக்கையில் இல்லை.
இதனால் எங்களது தேசிய லீக் உள்பட 9 முஸ்லிம் கட்சிகள் தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆதிதிராவிடர்களும், சிறுபான்மை மக்களும் அ.தி.மு.க.கூட்டணியை புறக்கணிக்க வேண்டும். நாங்கள் 40 தொகுதிகளிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறோம். ஐ.நா.சபை, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா உள்பட உலக நாடுகள் வற்புறுத்தியும் கட்டுப்படாத இலங்கை அதிபர் ராஜபக்சே, தமிழுணர்வோடு தள்ளாத வயதிலும் தமிழ் மக்களுக்காக முதல்-அமைச்சர் உண்ணாவிரதம் இருந்தவுடன் போர் நிறுத்தம் அறிவித்தார்.
மதசார்பற்ற அரசு
கடந்த 20 ஆண்டுகளாக இலங்கை தமிழர்கள் குறித்து பேசாத ஜெயலலிதா தேர்தலை முன்னிறுத்தி ஓட்டுக்காக தனி ஈழம் அமைப்பேன் என்று பொய்யை சொல்லி ஓட்டு கேட்கிறார். தமிழக மக்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இலங்கை தமிழர்களுக்காக 2 முறை ஆட்சியை இழந்தவர் கருணாநிதி. கடந்த 5 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் பங்கெடுத்த ராமதாஸ் தற்போது அவர்களை குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான அத்வானி, நாங்கள் ஆட்சி அமைக்க அ.தி.மு.க.ஆதரவு தரும் என்று கூறியுள்ளார். ஜெயலலிதாவும் அவரது கருத்தை மறுக்கவில்லை. தமிழக மக்களின் கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்வோம் என்று பாரதீய ஜனதாவும், அ.தி.மு.க.வும் கூறுகிறது. தமிழகத்தில் சுமார் 50 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் எந்த கூட்டணிக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற முடியும். மதுரையில் மு.க.அழகிரி வெற்றி பெறுவதன் மூலம் தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் உருவாகும். தமிழக முதல்-அமைச்சரின் வலது கரமான மு.க.அழகிரி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கட்சியின் மாநில பொது செயலாளர் அப்துல்காதர், பொருளாளர் ஜவகர் அலி, துணைத்தலைவர் நசுருதீன், தொண்டரணியின் மாநில செயலாளர் சர்புதீன் உள்பட பலர் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment