Friday, August 22, 2008

சென்னையில் ஆக. 31-ல் மாரத்தான் போட்டி: முதல் பரிசு ரூ. 10 லட்சம்

சென்னையில் ஆக. 31-ல் மாரத்தான் போட்டி: முதல் பரிசு ரூ. 10 லட்சம்


நாகர்கோவில், ஆக. 21: சென்னையில் இம் மாதம் 31-ம் தேதி நடைபெற உள்ள மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என, கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. பால்சுதந்திரதாஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ் மையம், குட்வில் கம்யூனிகேஷன்ஸ் அமைப்புகள் இணைந்து நடத்தும் கிவ் லைப் சென்னை மாரத்தான் ஓட்டப் பந்தயம் சென்னையில் இம் மாதம் 31-ம் தேதி நடைபெறவுள்ளது.

மொத்தம் 21.09 கி.மீ. தொலைவு கொண்ட இப் போட்டியில் இருபாலரும் பங்கேற்கலாம். முதல் பரிசாக ரூ. 10 லட்சமும், 2-வது பரிசாக ரூ. 5 லட்சமும், 3-வது பரிசாக ரூ. 2 லட்சமும், 4-வது பரிசாக ரூ. 1 லட்சமும், 5-வது பரிசாக ரூ. 50 ஆயிரமும், 6-வது பரிசாக ரூ. 25 ஆயிரமும், 7-வது பரிசாக ரூ. 15 ஆயிரமும், 8-வது பரிசாக ரூ. 10 ஆயிரமும், 9-வது பரிசாக ரூ. 5 ஆயிரமும், 10-வது பரிசாக ரூ. 3 ஆயிரமும், 11 முதல் 20-வது இடம் வரை பெறுவோருக்கு ரூ. ஆயிரமும் பரிசுத் தொகை வழங்கப்படும்.

இருபாலருக்கும் தனித்தனியே பரிசுகள் வழங்கப்படும். முதல் 20 இடங்களைப் பெறும் அனைவருக்கும் பதக்கம் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாரத்தான் ஓட்டத்தில் சேர விரும்புவோர் பதிவுக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ. 50. பள்ளி மாணவர்களுக்கு இலவசம். நிரப்பப்பட்ட படிவங்களை குட்வில் கம்யூனிகேஷன்ஸ், 68, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இதுகுறித்த கூடுதல் தகவல்களை நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட விளையாட்டு அலுவலரைத் தொடர்பு கொண்டு அறியலாம் என்றார் அவர்.

No comments: